Friday, June 12, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -18

இந்த கேளிக்கை விடுதி டர்பன் நகரின் மையப் பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் இருக்கும் இடத்தில் இருப்பது.  இதன் உள்ளே சில திரையரங்குகள், கேசினோ, ரெஸ்டாரண்டுகள், விளையாட்டு பகுதிகள் என பல்தரப்பட்ட கேளிக்கை அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.



எங்களுக்கான டிக்கட்டை கோகி வாங்கிக் கொள்ள நாங்கள் தியேட்டருக்குள் செல்லும் முன்னர் கோகியின் நண்பர்கள் சிலரை அங்கு பார்த்து விட அவர்களுடன் பேசிக் கோண்டிருந்து விட்டு சில புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு பின்னர் திரையரங்குக்குள் சென்றோம். ஏறக்குறைய அரங்கம் நிறைந்திருந்தது.

படம்  ஆரம்பிக்கும் போது கவனித்தேன். ஆங்கிலத்தில் சப்டைட்டில் ஓடிக்கொண்டிருந்தது. பலருக்கும் தமிழ் மொழிப்பேச்சு புரிவதில் சிரமம் இருப்பதால் ஆங்கிலத்தில் சப்டைட்டில் அவசியம் என்பதை புரிந்து கொண்டேன்.


நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் பார்க்கும் திரைப்படம். படத்தின் ஆரம்பமே கோரமான வன்முறை காட்சி. கொலை. ராமநாதபுரத்தில் பதிவாக்கப்பட்டது என்று அறியமுடிந்தது. அகா.. இந்த வருடம் த.ம.அ களப்பணிக்காக ராமநாதபுரம் செல்லவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கின்றோமே.. இந்த ஊரில் வன்முறை அதிகமாக இருக்குமோ என்ற எண்ணமே மனதில் தோன்றியது.  படத்தில் கதாநாயகியை அறிமுகப்படுத்தும் போதே உழைக்கும் தந்தைக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுக்கும் ஒரு கதாபாத்திரம். தந்தையைப் புரிந்து கொண்ட பெண் என்றுகாட்டும் அதே வேளை சாராயத்தை நியாயப்படுத்த கதாசிரியர் மேற்கொண்ட முயற்சி வெறுப்பையே உருவாக்கியது.  நான் தான் தமிழ் சினிமாவே பார்க்கவேண்டாம் என நினைத்திருந்தேனே. இப்போது வந்து பார்த்து இப்படி மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருக்க வேண்டுமா என எண்ணம் மனதில் எழாமல் இல்லை. இன்னொரு வகையில் இதையெல்லாம் பார்த்தால் தற்காலத் தமிழகச் சூழலை ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என்ற சிந்தனையும் மனதில் எழாமல் இல்லை.

கதை சுவாரசியமாக இருந்தது. பாடல் ஒன்று அப்போது மனதைக் கவர்ந்தது. ஆனால் மீண்டும் நினைத்துப் பார்த்தால் வரிகள் மனதில் நிற்காமல் மறைந்து விட்டன. படத்தில் கதாபாத்திரங்கள் மிக இயற்கையாக அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் படத்தில் காட்டப்பட்ட வன்முறை சம்பவங்கள் இது எவ்வகை மனிதத்தன்மை என்ற கேள்வியை என் மனதில் எழுப்பாமல் இல்லை.


படம் பார்த்து மனம் முழுக்க டென்ஷனை நிரப்பிக் கொண்டு வெளி யே வந்து ஒரு ரெஸ்டாரண்டில் காப்பி அருந்தினோம். பின்னர் கேளிக்கை விடுதியைச் சுற்றிப் பார்த்தோம். கேசினோவிற்குள் சென்று அதனுள்ளே உள்ள நிலைமையை அறிந்து கொள்ள ஆவல் தோன்றவே உள்ளே சென்றோம். கேசினோவிற்குள் ஏறக்குரைய 70 விழுக்காட்டினர் இந்திய வம்சாவளியினர் தாம் நிறைந்திருந்தனர். அதிலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மிக அதிகம். பணத்தை ஆயிரம் ஆயிரமாகக் கொண்டு வந்து  பல வேளைகளில் தொலைப்பதும் சில வேளைகளில் பணம் ஈட்டுவதும் இங்கு நடக்கின்றது. ஒவ்வொருவரும் வரிசையாக அமைக்கபப்ட்ட கேசினோ பாரில் அமர்ந்து தங்கள் முழு கவனத்தையும் கேசினோ மெஷின் மேல் வைத்துக் கொண்டு  அமர்ந்திருந்தனர். அங்கிருந்தோரில் பெரும்பாண்மையோர் மிகப் பருமனான உடல் அளவைக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே உள்ளூர் கருப்பர் இனத்தவர்களும் இருப்பதையும் காணமுடிந்தது. கேசினோவிற்குள்ளேயே உணவு பரிமாறும் ரெஸ்டாரண்டும் இருக்கின்றது. அங்கே பெர்கர் போன்ற துரித உணவு பரிமாறப்படுவதையும் பார்த்தேன்
.


ஆக மொத்தம் மனதிற்கும் உடலுக்கும், தாமே பணத்தைக் கொட்டி தெரிந்தோ தெரியாமலோ, தானே தனக்கு பாதிப்பைத் தேடிக் கொள்ள விரும்புபவர்கள் தாம் இவ்வகை இடங்களுக்குச் செல்கின்றனர் என்பதைக் காணமுடிந்தது.  மேலும் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு பின்னர்  புறப்பட்டோம். ஹோட்டலுக்கு வரும் போது இரவு மணி 12ஐ தாண்டியிருந்தது. ஆயினும் என் அறையில் பொன்னி ஏனைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் திரும்பியதும் மறு நாள் செல்ல வேண்டிய இடங்களைப் பற்றி கலந்தாலோசித்தோம். நான் தான் பயண வழிகாட்டி. ஆக எனது பட்டியல் படி செல்வோம் என அனைவரும் ஏற்றுக் கொண்டனர். மறு நாள் செல்ல வேண்டிய இடங்களைப் பட்டியலிட்டு பயண ஏற்பாட்டை செய்து முடித்த திருப்தியில் உறக்கம் தானாகவே வந்து என்னை அழைத்துக் கொண்டது.

தொடரும்..
சுபா

No comments:

Post a Comment