Saturday, August 8, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -25

டர்பன் நகரிலேயே  10 நிமிட வாகன பயணத்தில் அடையும் தூரத்தில் தான் அந்த இந்திய உணவகம் இருந்தது. எங்களுடன் வந்த திரு.சண்முகம் மட்டும் கீழே இருந்த  Fish & Chips  சாப்பிட சென்று விட ஏனைய 8 பேரும் மேலே இந்திய உணவகத்துக்கு சென்று சேர்ந்தோம். சுமாரான அலங்காரம் எனக் குறிப்பிடும் வகையில் உணவகத்தின் அலங்காரம் இருந்தது.

எங்கள் ஒவ்வொருவருக்கும் தேவையான உணவை ஆர்டர் செய்து விட்டு நாங்கள் ஆர்வத்துடன் பேச ஆரம்பித்தோம். அங்கிருந்த 8 பேரில் 4 பேர் மலேசிய தமிழர்கள். நான் மலேசிய தமிழர் தான் என்ற போதிலும் வாழ்வது ஜெர்மனி என்ற வகையிலும் கடந்த ஏறக்குறைய 17 ஆண்டுகள்  மலேசிய மண்ணை விட்டு அயலகத்திலேயே வாழ்வதாலும் மலேசிய சமூக நிலை அரசியல் என்பது பற்றி பேச ஆரம்பித்தோம்.

நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்த காலத்தில் தமிழ்ச்சமூகத்தின் பிரிவுகள் எனும் போது இலங்கைத் தமிழர்கள் இந்தியத் தமிழர்கள் என்ற வகையிலான குறிப்பிடத்தக்க, மிகத் தெளிவான பாகுபாடு இருக்கும்.  இதைத் தவிர சாதி அமைப்புக்களின் வேறுபாடு என்பது குறிப்பிடத்தக்க வகையில் அப்போது இருக்கவில்லை. ஆனால் தற்சமயம் நிலை மிக மாறி விட்டது. பல சாதி அமைப்புககள் மிக வெளிப்படையாகவே சாதிப்பெயரை வைத்து சங்கங்கள் நடத்துவதும் அதனால் பல குழுச்சண்டைகள் எழுவதும் என்ற வகையிலான சமூகக் கேடு மலேசியாவின் சில குறிப்பிடத்தக்க மானிலங்களில் சூழ்ந்திருக்கின்றது.

மலேசியாவைப் பொறுத்தவரை மலேசிய தமிழர்கள் தமிழக நிலை அதன் தாக்கம் என்பதை மிக ஆழமாக உள்வாங்கும் சமூகமாக  இருக்கின்றனர். பொருளாதார நிலையும் வாழ்க்கைத் தரமும் வேறுபாடானது என்ற போதிலும் பல மலேசியத் தமிழர்கள் இந்தியா வந்து இறைவழிபாட்டு நேர்த்திக்கடன் செய்வதும், ஆண்டு இறுதி இசை விழாவில் கலந்து கொள்வது, திருமணத்திற்கோ அல்லது வேறு குடும்ப வைபவங்களுக்கோ துணிமணிகள் வாங்குவதற்கும்  என்ற நிலை இருக்கின்றது. ஒரு சில மலேசியர்கள் தங்கள் மகன்களுக்கு தமிழகத்துப் பெண்களை மணமுடிப்பதும் இப்பொழுதும் நடைமுறையில் இருப்பதுதான்.


மலேசிய தமிழர்களைப் பொறுத்தவரையில் தமிழக சினிமாவின் தாக்கம் என்பது மிக மிக ஆழமானது. வாரம் ஒரு தமிழ்ப்படம் மலேசிய தொலைக்காட்சியில் ஒலிபரப்பாவது மட்டுமன்றி சினிமா தியேட்டர்களிலும் தமிழ்ப்படங்கள் கோலாலம்பூர், பினாங்கு, ஈப்போ, போன்ற பெரிய நகரங்களில் திரையிடப்படுகின்றன. தமிழ்ப்படங்களை மிக ஆழமாக உள்வாங்கும் சமூகமாக மலேசிய தமிழர்களில் பெரும்பாலோர் இருக்கின்றமை மறுக்கமுடியாத உண்மை. பலருக்கு தமிழ்ச்சினிமாக்கள் தான் தத்துவக் கூடங்கள், அதில் கூறப்படும் வசனங்கள், நீதிகள் மக்கள் நீதியாக பலர் மனதில் ஆழப்பதிய வைத்துக் கொள்கின்றனர். இதனால் வேண்டத்தகாத சில விசயங்கள் குறிப்பாக சாதிப்பெருமை பேசி பிரிவினை வளர்ப்பது, இளைஞர்கள் மத்தியில் தவறு இழைப்பவனும் ஒரு கதாநாயகனாகலாம் என்ற ஒரு எண்ணம் ஆகியவை தற்சமயம் வளர்ந்திருக்கும் சமூகக் கேடுகள்.


பேசிக்கொண்டிருக்கும் போதே உணவு வந்து விட்டது. உணவின் சுவை மிக நன்றாகவே அமைந்திருந்தது. அப்போதைய பசிக்கு அந்தச் சுவையான உணவு தேவாமிர்தம் போலத்தான் எங்களுக்கு இருந்தது.

மதிய உணவை முடித்து அங்கிருந்து புறப்பட்டோம். அன்றைய நாளின் எங்கள் பயணத்தின் இறுதி நிகழ்வாக என் பட்டியலில் இருந்தது விக்டோரியா சாலை சந்தை.

தொடரும்

சுபா

No comments:

Post a Comment