Thursday, August 13, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -26

சந்தைக்குச் சென்று பொருள் வாங்கப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கின்றார்களா?  எந்த ஊராகட்டும், எந்த இனமாகட்டும் எந்த நாடாகட்டும்.
மனிதர்களுக்குப் புதிய பொருட்களை வாங்குவது என்பதில் அலாதிப் பிரியம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

பெரும்பாலும் ஷாப்பிங் செல்வது என்றாலே ஏதோ பெண்களுக்கான விசயம் போல ஒரு சிலர் கேலி செய்து பேசுவதை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். அது என்னவோ.. எனது நட்புச் சூழலில் உள்ளவர்களும் சரி.. புதிதாக இணைந்து கொள்பவர்களும் சரி. ஆண் பெண் என்ற பாகுபாடு இன்றி ஷாப்பிங் செய்வதில் விருப்பம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இந்த முறை பயணத்திலும் அப்படித்தான்.

நாங்கள் மதிய உணவு முடித்து விக்டோரியா சாலை சந்தைக்கு வாகனத்தை செல்லக் கேட்டுக் கொண்டோம். அங்கே 90 நிமிடங்கள் செலவிடலாம் என்ற வகையில் திட்டமிட்டிருந்தோம்.

முதலில் நாங்கள் உள்ளே நுழைந்ததுமே கைவினைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளே அதிகம் இருந்தன அதில் ஒரு கடைக்குள் அனைவருமே நுழைந்தோம்.அதில் குறிப்பாக எல்லோரையும் மிகக் கவரந்தவை எனச் சொன்னால் பெண்கள் கழுத்தில் அணியும் ஆப்பிரிக்க மணிச்சரங்கள் தாம்  எல்லோருமே ஒவ்வொருவருக்கும் பிடித்தவைகளை பார்த்து விலை பேரம் பேசி  எடுத்துக் கொண்டோம். கனடாவிலிருந்து வந்த நண்பர் ராஜரட்ணம் தன் துணைவியாருக்கும் சேர்த்து என்னை தேர்ந்தெடுக்கச் சொன்னார். நான்கைந்து வர்ணங்களில் நீண்ட சரம் போன்ற கழுத்து மணிகளை எனக்கும் வாங்கிக் கொண்டேன்.



அதே கடையிலேயே ஆப்பிரிக்க கைவினைப் பொருட்களும் இருந்தமையால் பொன்னியும் திரு,சண்முகமும் மனித உருவச் சிற்பங்களை தேர்ந்தெடுகக் விரும்பினர். அவர்களுக்குத் தேவையானதையும் தேடிப் பார்த்து பலவிதமான பொம்மை சிற்பங்களைப் பார்த்து எவை பொருத்தமாக இருக்கும் என தேடுவது சற்றே சிரமமாக இருந்தது. ஏனெனில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. நானும்  என் வீட்டு அலங்காரத்திற்காக ஒரு ஜோடி ஆப்பிரிக்க மனிதர் சிலைகளை வாங்கிக் கொண்டேன். இவை மரத்தால் செய்யப்பட்டவை.

பின்னர் அங்கிருந்து அடுத்த பகுதிக்குச் சென்றால் முதல் கடையை விட இங்கேமேலும் பல கைவினப் பொருட்கள் முந்தைய கடையை விட விலை  குறைவாக இருந்தமையை உணர்ந்தோம். இங்கே ஏறக்குறைய எல்லோருமே வாழை இலைகளால் செய்யப்பட்ட சுவர் ஓவியங்களை வாங்கிக் கொண்டோம். இவை எளிமையாக அதே வேளை மிக வித்தியாசமான கைவினைப்ப்பொருட்களாக இருந்தமையால் எங்கள் அனைவரின் கவனத்தையும் இவ்வோவியங்கள் ஈர்த்தன.

ஒவ்வொரு  நாட்டிலும் அந்த நாட்டு மக்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் கைவினைப்பொருட்கள் சுற்றுப்பயணிகளைக் கவரும் அம்சங்களில் ஒன்று. அதிலும் தென்னாப்பிரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில் இயற்கை வளங்களைக் கொண்டு செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் கண்களையும் கருத்தையும் கவர்பவை
.


அதே விக்டோரியா சாலை சந்தையில் ஒரு கடையில் தென்னாப்பிரிக்க தமிழ்பெண்மனி ஒருவரின் கடைக்கும் சென்றோம். அவர் மளிகைப் பொருட்கள் விற்கும் கடையை நடத்தி வருகின்றார். அவருக்குத் தமிழ் பேசத்தெரியாது ஆங்கிலத்தில் மட்டுமே எங்களுடன் உரையாடினார்.



மேலும் சில நிமிடங்கள் எனச் சுற்றிப் பார்த்து விட்டு சந்தையிலிருந்து புறப்பட்டோம். அன்றைய ஒரு நாள் பயணம் மாறுபட்ட அனுபவங்களை எங்களுக்கு வழங்கியிருந்தது.

மாலை ஆறு மணியளவில் எங்கள் தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். மாலைப் பொழுது அங்கேயே நண்பர்களுடன் கதை பேசிக் கொண்டிருந்ததில் மிக இனிமையாகக் கழிந்தது.

தொடரும்..

சுபா

No comments:

Post a Comment