Saturday, April 11, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! - 1


​காந்தி வாழ்ந்த இடத்தில் .. ஷுலு இனக்குழு மக்களின் குழந்தைகளோடு

​உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தென்னாப்பிரிக்க கிளையின் தலைவர் திரு.மிக்கி செட்டி அவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனி வந்திருந்த பொழுதில்,  இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள தமிழாசிரியர் பட்டமளிப்பு விழாவிலும் அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள செயலவைக் குழு தேர்தல் நிகழ்விலும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். அலுவலக பணிகளுக்கிடையேயும் எனது முனைவர் பட்ட ஆய்வுக்கிடையேயும் இதனை சாத்தியப்படுத்த முடியுமா என்ற ஒரு அய்யம் மனதில் இருந்து கொண்டிருந்தது. ஆயினும் இந்த இயக்கத்தின் செயலவைக் குழுவினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பயணத்திற்கு திட்டமிட்டேன்.

இந்த இயக்கத்தில் பல ஆண்டுகள் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர், நான் ஜொஹான்னஸ்பெர்க் நகருக்கு டிக்கட் போடவேண்டுமென்று தகவல் சொல்லிவிட்டார். ஆக அங்கு செல்ல விமானத்தை தேடிய போது எத்தியோப்பியன் விமானத்தில் குறைந்த நேர இடைவெளி.  அத்தோடு பயணக்கட்டணமும் கணிசமான விலை என்ற வகையில் டிக்கட் அமைந்தது. நானும் தோழி இந்துவும் பயணத்திற்கு டிக்கட்டை பதிந்து கொண்டோம். இதைப் பற்றி அந்த பொறுப்பாளரிடம் குறிப்பிட்ட போது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸில் சென்றால் இபோலா காய்ச்சல் வந்து இறந்து விடுவீர்கள் என்று கூடுதல் 'இன்மொழி' கூறினார்.

என்ன செய்வது ..? இப்படியும் சில மனிதர்கள்!

எத்தியோப்பியன் விமான பயண விபரங்களைப் பார்த்தபோது தினம் ஒரு விமானம் எத்தியோப்பியா செல்வதை அறிந்து கொண்டேன். ஜெர்மனியில் கணிசமான எண்ணிக்கையில் எத்தியோப்பியர்களும் ஆப்பிரிக்காவின் ஏனைய நாடுகளைச் சேர்ந்தோரும் இருக்கின்றனர். விமானத்தில் பயணித்தாலே இபோலா நோய் வரும் என நினைப்போரை என்ன செய்வது? எல்லாம் அறியாமை தான் காரணம். இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களே என வருந்திக் கொண்டதோடு மட்டுமல்லாது அந்த நபருக்கும் இபோலா பற்றியும் அனைத்துலக விமானப்பயணத்தில் கடைபிடிக்கப்படும் சுகாதார முறைகள் பற்றியும் சற்று விளக்கியும் கூறினேன்.


​விமானப் பயணத் தகவல்

ஆனால் பின்னர் டர்பனில் தான் நிகழ்வு என்று உறுதியானதும் ஜொஹான்னஸ்பெர்கிலிருந்து டர்பனுக்கு ஒரு பயண டிக்கட் கூடுதலாக பதிவு செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. குலுலா விமான சேவையகத்தில் இதற்கான  டிக்கட்டை  எனக்கும் இந்துவிற்கும் பதிந்து கொண்டேன்.

எங்களின் பயணம் 4 விமான நிலையங்களில் உலாவும்  வகையில் 3 விமானங்களில் பயணம் என்ற வகையில் அமைந்தது. இப்படி ஒரு பயணத்தை இது நாள் வரை நான் என் வாழ் நாளில் செய்த்தில்லை. எல்லாம் புது அனுபவம் என நினைத்து பயண ஏற்பாட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டேன்.

  • ஃப்ராங்பர்ட் நகரிலிருந்து எத்தியோப்பிய விமானத்தின் வழி முதலில் அதன் தலைநகரான அடிஸ் அபாபாவிற்குப் பயணம்
  • அடிஸ் அபாபாவிலிருந்து ஜொஹான்ன்ஸ்பெர்க்
  • பின்னர் ஜொஹான்னஸ்பெர்கிலிருந்து டர்பனுக்கு 

என பயணம் இருந்தது.


​ஃப்ராங்பர்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட எஹ்ட்தியோப்பிய விமானம்

எனது வாகனத்தில் ஃப்ராங்பர்ட் விமான நிலையம் வரை பயணம் செய்து அங்கு விமான நிலைய கார் பார்க்கில் வாகனத்தை விட்டு விட்டு எத்தியோப்பிய விமானத்தில் நானும் இந்துவும் அடிஸ் அபாபா நோக்கி புறப்பட்டோம்.​

தொடர்வோம் நம் பயணத்தை டர்பனுக்கு....

சுபா

No comments:

Post a Comment