Thursday, April 16, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -5

முதல் நாள் குறிப்பிட்டது போல காலை 7 மணி வாக்கில் தயாராகி ஹோட்டலில் காலை உணவுக்கு நண்பர்கள் அனைவரும் வந்து சேர்ந்து விட்டோம். ஹோட்டலில் தங்கியிருந்த 5 நாட்களும் ஹோட்டல் பணியாளர்கள் மிகப் பணிவுடனும் அன்புடனும் வருகையாலர்களான எங்களுடன் பழகினர். திரு.மிக்கி செட்டியின் நண்பரின் ஹோட்டல் அது என்பதும் கூடுதல் செய்தி. மிகத் தரமான நவீன வசதிகளைக் கொண்ட ஒரு ஹோட்டல் அது.



​ஹோட்டல் அறையிலிருந்து,  இந்திய பெருங்கடல், அதிகாலை நேரக் காட்சி

காலை உணவின் போதும் மாலை உணவின் போது பணியாளர்கள் அனைவரும் எங்களின் தேவையைக் கேட்டறிந்து தக்க வகையில் பணிவிடைகளைச் செய்தனர். அவர்களில் சிலர் கல்லூரிகளில் படிப்பவர்கள். பகுதி நேரமாக இங்கே பணிபுரிகின்றனர் என்ற விசயத்தையும் அறிந்து கொண்டேன்.


ஹோட்டல் பணியாளர்களுடன் நானும் சாம் விஜயும்

காலை உணவு முடித்து ஏறக்குறைய 9 மணி அளவில் எங்களுக்காகத் தயாராக இருந்த பேருந்தில் அனைவரும் ஏறி டர்பன் நகரின் மையப்பகுதியில் இருக்கும் எம்டிஎஸ் மண்டபத்திற்குப் பயணமானோம். அங்கு தான் தேர்ச்சி பெற்ற தமிழாசிரியர்களுக்கு பட்டமளிப்பு விழா ஏற்பாடாகியிருந்தது.


​மலேசியப் பேராளர்களுடன்

பேருந்தில் செல்லும் போது கனடாவிலிருந்து வந்திருந்த செய்தியாளர் ஒருவர் மிக அருமையாக ரேடியோ ஒலிபரப்பு செய்வது போல மைக்கை வைத்து பக்திப்பாடல், காலைச் செய்தி என நல்ல பொழுது போக்கு அம்சங்களை வழங்கினார். இப்படி இனிமையாக பாடல்களையும் செய்திகளையும் கேட்டுக் கொண்டே 25 நிமிடம் பயணம் செய்தது மிக சுவாரசியமாக இருந்தது. திடீரென்று பொறுப்பாளர் என்னை அழைத்து வந்திருப்போருக்கு நன்றியுரை கூறுமாறு கேட்டுக் கொண்டார். இந்த திடீர் அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. சிறிய நன்றியுரையை பேருந்திலேயே நான் செய்து முடிக்க, பொறுப்பாளர் இனிமையான வார்த்தைகளைச் சொல்லி என்னையும் மற்றவர்களையும் சிரிக்க வைத்து விட்டார்.

மண்டபத்திற்குள் சென்ற எங்களைச் சிறப்பு விருந்தினர் பகுதியில் அமர வைத்தனர். ஏற்கனவே பட்டம் பெறப்போகும் மாணவர்கள் ஒரு தனிப்பகுதியில் அமர்த்தப்பட்டிருந்தனர். ஏராளமான பொது மக்களும் வந்திருந்தனர். தமிழ்ச்சங்கங்களின் பிரதினிதி அரசாங்க அலுவலர்கள், பட்டம் பெறுவோரின் குடும்பத்தினர்  என அரங்கம் நிறைந்திருந்தது.


பட்டம் பெற்ற தென்னாப்பிரிக்க தமிழ் மாணவர்கள்


மேடையில் எஸ்.ஆர்.எம்.கல்லூரியின் வேந்தர், திரு.மிக்கி செட்டி, இந்திய தூதர், மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொறுப்பாலர்கள் என சிலர் அமர்த்தப்பட்டனர்.

தென்னாப்பிரிக்காவில் முறையாக பள்ளிகளில் தமிழ் போதிக்க பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாத குறையைப் போக்க வேண்டும் என்று திரு.மிக்கி செட்டி தமிழகத்தின் பல கல்லூரிகளை நாடியிருக்கின்றார். ஆயினும் ஒரு சிறப்பு ஆசிரியர் பயிற்சி என்பது சாத்தியப்படாது என்ற நிலையில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தராகிய டாக்டர்.பொன்னவைக்கோவை அணுக அவர் ஒரு பிரத்தியேக பாடத்திட்டத்தை இதற்காக உருவாக்கலாம் என நம்பிக்கைக் கூறி அதற்கு டாக்டர்.இல.சுந்தரத்தைப் பொறுப்பாளராக அமைத்து டர்பனில் வகுப்புக்கள் நடைபெற ஏற்பாடு செய்து தந்திருக்கின்றார். ஆசிரியர் பயிற்சி முடித்து தேர்வும் நடைபெற்றதில் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு.மேஸ்திரி வரவேற்புரை ஆற்றுகின்றார். மேடையில் சிறப்பு விருந்தினர்கள்

இந்த வகுப்புக்களை ஏற்பாடு செய்வதிலிருந்து மாணவர்கள் கட்டணம் வரை என்று பொருளாதார வகையில் உதவியதோடு இதற்காக சென்னை சென்று பல முறை நேரடியாக பாடத்திட்டம் முறையாக உருவாக்கப்படுவதையும் கண்காணித்தும் ஏற்பாடுகள் செய்தும் உதவியதில் திரு.மிக்கி செட்டியின் பங்கு மிகப் பெரியது.

டர்பன் நகரில் தமிழ் மக்களின் குழந்தைகள் தமிழ் பேசுவது என்பது நடைமுறையில் இல்லை. இதனை மாற்ற வேண்டுமென்றால் முறையான தமிழ் வகுப்புக்களை நடத்தும் திறன் பெற்ற தக்க பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை என்பதை நன்கு உணர்ந்து அதனைச் செயல் படுத்தும் நடவடிக்கையில் தன்னை முழுமையாக அர்பப்ணித்துக் கொண்டவர் திரு.மிக்கி செட்டி. டர்பன் நகரில் இருக்கும் தமிழ்சங்கங்கள் ஏனைய தமிழ் சமூக நல இயக்கங்கள் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பில் இருப்பவர் இவர்.



திரு.மிக்கி செட்டி தென்னாப்பிரிக்க நகர் தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை.

டர்பனில் பயணத்தைத் தொடர்வோம்..

No comments:

Post a Comment