Thursday, April 16, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -4

டர்பன் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் ஆப்பிரிக்க உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் நண்பர்கள் யாராகினும் இருப்பார்கள். ஆக உடனேயே புறப்பட்டு தங்கும் விடுதி சென்று விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வெளியே வந்து ஏறக்குறைய 10 நிமிடங்களாகியும் அங்கு யாரையும் காணவில்லை. மனதில் மெலிதாக ஒருவித அலுப்பும் எரிச்சலும் படர ஆரம்பித்தது.

சரி.. அதிக நேரம் காத்திருக்க வேண்டாம் என நினைத்து எனது தொலைபேசியில் கொடுக்கப்பட்டிருந்த தொடர்பாளர் ஒருவரது எண்ணை அழைத்தேன். அவரிடம் பேசியபோது யாரும் விமான நிலையம் வரவில்லை எனச் சொல்லி டாக்ஸி எடுத்து வந்து விடுங்கள் என்று ஒரு அதிர்ச்சியை தெரிவித்தார். அவரிடம் தொடர்பை துண்டித்து விட்டு ஏற்கனவே ப்ரான்ஸிலிருந்து வந்திருந்த நண்பர் சாம் விஜய்க்கு தொலைபேசியில் அழைத்து நாங்கள் வந்து விட்டதையும் விமான நிலையத்தில் யாரும் இல்லை என்ற விபரத்தையும் தெரிவித்தேன். அவர் உடன் ஏற்பாட்டளர்களைத் தொடர்பு கொண்டதில் ஏற்கனவே ஒருவர் வந்து காத்திருப்பதாக எனக்குச் செய்தியைச் சொன்னபோதுதான் சற்று மனம் அமைதி அடைந்தது. பேசிக் கோண்டிருக்கும் போதே ஒருவர் எங்கள் அருகில் வந்து எங்கள் பெயரைச் சொல்லி தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டார்.

ஏற்பாட்டுக் குழுவில் இருக்கும் நண்பர் அப்துல்லா தான் அவர். மிக அன்பான மனிதர். அவரிடம் நடந்ததைச் சொன்னேன். அவருக்கு சற்றே குழப்பமாகிவிட்டது. பின்னர் நான் அழைத்த எண்ணைப் பார்த்து அது ஜொஹான்னஸ்பர்க் தொலைபேசி எண் என்றும் அவர்களுக்கு இந்த ஏற்பாட்டு விஷயம் தெரியாதென்றும் கூறினார்.

பின்னர் தாம் வேறொரு  பகுதியில் கனடாவிலிருந்து வந்திறங்கிய கனடா பேராளர்கள் உதயன் பத்திரிக்கை ஆசிரியர் திரு. லோகேந்திரலிங்கம், திரு.துரைராஜ் ஆகியோரை தேடி அழைத்துக் கொண்டு வருவதில் தாமதமாகி விட்டது எனத் தெரிவித்து எங்களை வாகனத்திற்கு அழைத்துச் சென்றார்.

டர்பனில் அப்போது ஏறக்குறைய மாலை 6.50 எட்டியிருந்தது. மெலிதான இருள் படர்ந்திருந்தது. சீதோஷ்ணம் ஏறக்குறைய 26 டிகிரி இருக்கலாம் என்ற வகையில் இதமான வெப்பம்.. மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.





கனடாவிலிருந்து வந்த நண்பர்களிடமும் திரு.அப்துல்லாவிடமும் பேசிக் கொண்டே நாங்கள் தங்க வேண்டிய விருந்தினர் தங்கும் விடுதிக்கு வந்தடைந்தோம். உம்ஷ்லாங்கா பகுதியில் கடற்கரை அருகே அமைந்திருக்கும் ஒரு 4 நட்சத்திர ஹோட்டல் அது.முகப்பிலேயே பிரமாண்டமான அலங்காரம்.




மேலே வரவேற்பறைக்குச் செல்வதற்குள் திரு.மிக்கி செட்டியும் வந்து விட்டார். எங்கள அனைவருக்கும் வரவேற்பு கூறி அழைத்துச் சென்றார். எங்கள் அறைகள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டபின் நேராக உணவு இருக்கும் பகுதிக்குச் சென்று வந்திருக்கும் நண்பர்களைச் சந்தித்து விட்டு பின்னர் அறைக்குச் செல்லலாம் என எனக்குத் தோன்றியது. இந்துவிடம் சொல்ல அவருக்கும் சம்மதம். இருவருமாக மாலை விருந்து நடந்து கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்றோம்.

அங்கே ஏற்கனவே முன்னர் அறிமுகமான சில நண்பர்களும் புதிய நண்பர்களும் இருந்தனர். என்னைப் பார்த்ததும் வந்து அழைத்துச் சென்ற மலேசிய பிரதினிதியும் கழகத்தின் துணைத்தலைவருமான திரு,ப.கு.சண்முகம் இருந்த  மேசையிலேயே அமர்ந்து கொண்டோம். சற்று நேரத்தில் அங்கு வந்த பாரத் பல்கலைக்கழக் துனை வேந்தர் டாக்டர். பொன்னவைக்கோவும் எங்களுடன் இணைந்து கொண்டார்.


திரு.ப.கு.சண்முகம், சுபா, டாக்டர்.பொன்னவைக்கோ, புலவர்,சேதுராமன், இந்து


மாலை உணவை சுவைக்கத் தொடங்கினோம். மிதமான காரத்தில் நல்ல சுவையுடன் உணவு இருந்தது. இந்திய வகை உணவையே நான் எடுத்துக் கொண்டேன்.  சேமியா பாயசம் மிக கெட்டியாக இனிப்புச் சுவை தூக்கலாக இருந்தது.

ஏறக்குறைய 3 மணி நேரம் அங்கேயே இருந்து நணபர்களுடன் பேசி விட்டு இயக்கத்தின் மகளிர் பகுதி தலைவி பொன்னி வீரப்பனுடன் அவர் அறையில் தங்கிக் கொள்ளச் சென்றேன். மறு நாள் காலை 7 மணிக்கெல்லாம் உணவை முடித்து 9 மணிக்கெல்லாம் பேருந்தில் பட்டமளிப்பு விழாவுக்கு செல்ல தயாராகவேண்டும் என்று கட்டளை இருந்தது. அதை நினைத்துக் கொண்டு சிறிது கதை பேசி விட்டு பயணக் களைப்பும் அதிகரிக்க உறக்கம் வந்து விட்டது.

தொடரும்..

No comments:

Post a Comment