Friday, November 2, 2018

SriLanka - 44.பேராதனைப் பல்கலைக்கழகம்

2.10.2018
பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் எங்களின் இந்த காலைப்பொழுது தொடங்கியது. அங்கு விருந்தினர் தங்கும் விடுதியில் தங்கியிருந்தோம். காலை உணவுக்கு மாணவர்கள் வந்து பசியாறும் பகுதிக்குச் சென்றோம். இதுவரை நான் பெயர் கேள்விப்படாத பல பலகார வகைகளை அங்கு காண முடிந்தது. அதில் சோயா தோசையும் சில பலகாரங்கரங்களையும் வாங்கி சுவைத்தோம்.
17,000 மாணவர்கள், 3000 ஆசிரியர்கள், 2400 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட வளாகம் பேராதனை பல்கலைக்கழகம்.
எங்களின் பெரும்பாலான நேரம் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்திலேயே கழிந்தது. தமிழ் நூல் பகுதிக்குச் சென்றிருந்தோம். தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் தொகுப்பினைப் பார்வையிட்டோம்.
பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் சிங்கள நூலக ஊழியர்களுக்கு ஆவணப்பாதுகாப்பில் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக ஆங்கிலத்தில் உரையாற்றினோம்.
பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் அரிய சேகரிப்பில் உள்ள ஓலைச்சுவடிகளை நேரில் கண்டோம். நூலகத்தின் அடித்தளத்தில் உள்ல பாதுகாப்பு அறைக்கும் திரு.மகேஸ்வரன் அவர்களுடன் சென்று அங்குள்ள பாதுகாக்கப்படும் நூல்களைப் பார்வையிட்டோம்.
இலங்கையில் பதிப்பிக்கப்படும் வெளியிடப்படும் ஒவ்வொரு நூலின் 5 படிவங்கள் 5 பகுதிகளுக்குச் சென்று பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ள சட்டம். அந்த ரீதியில், வெளியிடப்படும் ஒவ்வொரு நூலின் ஒரு படிவம் பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தின் சேகரப்பிற்காக இணைக்கப்படுகின்றது.
மதியம் கண்டி முத்தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் எனது உரை நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது. நடனமாடிய சிறுமிகளின் பாவனையும் நடன அமைப்பும் மனதை விட்டு அகலவில்லை. நிகழ்ச்சிக்குத் தலைமையுரையாற்றிய கலாநிதி துரை மனோகரன் அவர்களின் அருமையான வழிகாட்டுதலில் இந்த அமைப்பு சீரிய செயல்பாடுகளை முன்னெடுக்கின்றது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இங்கு கண்டியில் தான் பிறந்தவர் என்ற கூடுதல் செய்தியையும் அறிந்து கொண்டேன். முத்தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு மென்மேலும் சிறப்புடன் செயல்பெற தமிழ் மரபு அறக்கட்டளையின் நல்வாழ்த்துக்கள்.
கண்டியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ததோடு சிறந்து விருந்துபசரிப்பையும் வழங்கிய பேராதனை பல்கலைக்கழக நூலகர் திரு.மகேஸ்வரன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி.
-முனைவர்.க.சுபாஷிணி








No comments:

Post a Comment