Saturday, November 3, 2018

SriLanka - 46 இலங்கை பயணம்

3.11.2018
26ம் தேதி அக்டோபர் தொடங்கி இன்று வரை இலங்கையில் 9 நாட்கள் எனக்கு பல்வேறு புதிய அனுபவங்களை அளித்தது. பயணத்தில் தமிழ் மரபு அறக்கட்டளைக்கானப் பணிகளின் திட்டங்கள் பலரது ஒத்துழைப்பாலும் உழைப்பாலும் சிறப்பாக தொடக்கம் கண்டிருக்கின்றது. புதிதாக அறிமுகமானாலும் கூட, பேஸ்புக் பக்கத்தில் மட்டுமே பார்த்திருந்தாலும் கூட, என்னைக் காணத் தேடி வந்து பேசி என்னை அன்பில் ஆழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்க வேண்டியது என் கடமை. அதில் சிலரது செயல்பாடுகள் த.ம.அ இலங்கை கிளை அமைப்பின் வளர்ச்சிக்கும் உதவுவதால் அவர்களைப் பெயர் குறிப்பிட்டு வாழ்த்த விரும்புகிறேன்.
ஆசிரியை வாலண்ரீனா – யாழ்ப்பாணத்தில் த.ம.அ குழுவினருக்குப் பலவகையில் எல்லா ஏற்பாடுகளிலும் உறுதுணையாக இருந்தவர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரா.கலாநிதி புட்பரத்தினம் – இலங்கை வரலாற்றினை ஆவணப்படுத்துதலில் ¬வரலாற்றுத் தகவல்களை வழங்கியதோடு எங்கள் பயணத்தின் முக்கிய நோக்கமாகிய த.ம.அ இலங்கை கிளை அமைப்பை உறுதி செய்தி செயல்படுத்தியவர்.
மலையகத்தில் த.ம.அ குழுவினரை வரவேற்று எங்களுக்குத் தேவையான சில தகவல்களை வழங்கியவர் ஹட்டன் பகுதி திரு.தியாகு.
ஹட்டன் பகுதியிலிருந்து வல்லக்கோட்ட பகுதிக்கு களப்பணி சென்றபோது எங்களுக்கு ஆட்டோ ஓட்டி வந்த தம்பி நிஜாம். எங்களில் ஒருவராகவே இணைந்து கொண்டு அவரும் மின்னாக்கத்தில் ஈடுபட்டது, காரணம் தெரிந்தால் பொதுமக்களும் ஆவணப்படுத்துதலில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதற்குச் சான்றாக அமைந்தது.
கண்டியில் மட்டுமே முதலில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தாலும் எனது நூலகம் மட்டும் அருங்காட்சியகம் தொடர்பான ஆர்வத்தை அறிந்து கொண்டு தக்க தகவல்களை வழங்கிய பேராதனைப் பல்கலைக்கழக நூலகர் இரா. மகேஸ்வரன். எல்லா வகையிலும் முற்றும்முழுமையுமாக உதவியதோடு பல புதிய நண்பர்களையும் நமக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர்.
வட்டக்கொடை ராஜசேகர் அவர்கள் – தனிமனிதராக ஆவணங்களைச் சேர்த்துத் தொகுப்பதில் ஆர்வம் கொண்டவர். அவரது சேகரிப்பில் உள்ள ஆவணங்களை த.ம.அ பொது மக்களின் நலனிற்காக மின்னாக்கம் செய்து வெளியிடலாம் என பொது நலச் சிந்தனையுடன் எங்களை வரவேற்று தகவல் பரிமாறிக் கொண்டார்.
கண்டியில் சந்தித்த தம்பி லக்ஷ்மணன். மலையக மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் சமூகச் சேவையாளர்.
நியூ பீக்கோக் பகுதி மலையக மக்களின் வாழ்வியல் அருங்காட்சியகத்தின் சந்தனம் சத்தியநாதன். இவர் போன்றவர்கள் தான் மலையக மக்களின் வரலாற்றை இன்று உலகிற்கு வெளிச்சப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
கொழும்பு நகரில் திவ்யா, ஐயா மற்றும் அம்மா விமலேந்திரன் குடும்பத்தினர். கொழும்பு நகரில் எங்களை வரவேற்று பாதுகாத்து பத்திரமாக அனுப்பி வைத்த அன்புள்ளங்கள்.
கொழும்பு திரு.யோகராஜ், திரு.இராமன் – தக்க நேரத்தில் எங்களை இரவில் வரவேற்று பத்திரமாக அனுப்பி வைத்த சகோதரர்கள். திரு.யோகராஜ் ஏற்பாடு செய்து அனுப்பிய ஆட்டோ ஓட்டுநர் – அவருடன் பயணித்த பொழுதுகளில் கொழும்பு மக்களின் மனம், அவர்களின் ஒற்றுமை பற்றி அறிய முடிந்தது.
நேற்று இரவு பேருந்தில் சந்தித்த திரு.உமா மகேஸ்வரன் – நமது பணிகளில் ஆர்வம் கொண்டு அவர் கூறியவை..
துவாரகியின் அன்பு இனிமை.
இன்று இறுதியாக எங்களை கொழும்பு நகரிலிருந்து ரமாடா ஹோட்டல் வரை அழைத்து வந்த சிங்கள ஆட்டோ ஓட்டுநர்…..
இப்படி பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம்.
இலங்கையில் நான் சந்தித்த மக்கள் - தமிழ்மக்கள், சிங்களவர், இசுலாமியர் அனைவருமே எங்களுடன் அன்புடனும் அக்கறையுடனும் பழகினர்.
பல்வேறு புதிய அனுபவங்களை சுமந்து சென்னை பயணிக்கின்றேன். மீண்டும் விரைவில் சந்திப்போம்.
“மதங்கள் துறந்து மனிதம் பிறக்கட்டும்
அன்பும் அறனும் ஓங்கட்டும்”
-சுபா


No comments:

Post a Comment