Wednesday, November 11, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 7

6ம் நாள் - மலாகா



மலாகா விமான நிலையத்தில் நாங்கள் வந்திருங்கியிருந்தாலும் 6ம் நாள் வரை இந்த நகரத்திற்கு நாங்கள் வரவில்லை. மலாகா ஒரு பழம் நகரம். உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காஸோ பிறந்த நகரம். பல நூற்றாண்டுகளாக ஸ்பெயினின் முக்கிய துறைமுகமாக விளங்கி வருகின்றது இந்த நகரம்.







நகரின் உள்ளே வந்ததுமே வாகனத்தை ஓரிடத்தில் வைத்து விட்டு நடக்கத் தொடங்கினோம். மலாகாவின் எல்லா முக்கிய இடங்களையும் சுற்றுலா பேருந்து ஏறி சுற்றி வரலாம். இதற்கு 8 யூரோ கட்டணம்.







இதில் அமர்ந்து ஒவ்வொரு இடங்களாக பார்க்க ஆரம்பித்தோம். இடையில் சில நிறுத்தங்களில் இறங்கி பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து விட்டு மீண்டும் பேருந்தில் ஏறி அடுத்த இடத்திற்குச் செல்லலாம்- ஒரே கட்டணத்தில்.







முதலில் நாங்கள் பார்க்க விரும்பிய இடம் அரேபிய கோட்டையான அல்கஸாபாவும் கிப்ரால்பாரோவும். இது 12ம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்ட ஒரு கோட்டை.







இந்த கோட்டையைச் சுற்றி பார்த்த பின்னர் அடுத்ததாக மெட்ரோபோலிட்டன் தேவாலத்திற்குச் சென்றோம். மிக மிகப் பிரமாண்டமான தேவாலயம். இந்த தேவாலயம் ஒரு மசூதியின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. மசூதி இடிக்கப்படு பின்னர் இந்த தேவாலயம் கிறிஸ்துவ ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கேயும் மூல விக்ரகம் அன்னா மரியா தான்.










இந்த தேவாலயம் நுண்கலைக்கு ஒரு எடுத்துக் காட்டு. மிக உயரமான மதில்கள். சுவர்களில் அலங்கார விலக்குகள்; பூஜைக்குரிய சிறப்பிடம்; அங்கு பாதிரியார்கள், தேவாலய முக்கியஸ்தர்கள் அமர்வதற்கான இடங்கள் போன்றவை ஒவ்வொன்றும் திட்டமிடப்பட்டு செதுக்கிய வடிவங்கள். எனது கேமராவில் படங்கள் எடுத்து எனக்கு அலுத்துப் போய்விடும் அளவிற்கு ஒவ்வொரு முக்கிய இடங்களாக எனது கேமாராவில் கிளிக் செய்து கொண்டேன். ஆனால் நேரில் பார்ப்பதில் இருக்கும் அனுபவத்தில் ஒரு சிறிதளவினைத்த்தான் புகைப்படங்களில் பார்க்கும் போது கிடைக்கின்றது.










இந்த தேவாலயத்தில் பூஜைகளும் நடந்து வருகின்றன; இது வெறும் சுற்றுலா மயம் மட்டுமல்ல.







இதனைப் பார்த்த பிறகு சற்று நடந்து துறைமுகம் அருகில் வந்து சேர்ந்தோம். பல சிறிய பெரிய கப்பல்கள். மலாகாவின் வியாபார பலத்தையும் ஆளுமையையும் இவை காட்டுவனவாக அமைந்திருந்தன.







பிறகு மீண்டும் பேருந்தில் ஏறி மலாகா நகர மையத்திற்குள் வந்து சேர்ந்தோம். சாலைகளின் இரு பகுதிகளிலும் கடைகள். இங்கு மிருகங்களின் தோலினால் செய்யப்பட்ட பொருட்கள் மிகப் பிரசித்தி பெற்றவை. தோல்பைகள், காலணிகள் போன்றவற்றை நல்ல விலைக்கு வாங்கி மகிழலாம்.







நடந்த களைப்பில் மதிய உணவை ஒரு உணவகத்தில் முடித்த பின்னர் மேலும் தொடர்ந்து சில இடங்களைப் பார்க்க நடந்தோம். மாலை முழுவதும் வேறு பல இடங்களையும் பார்த் பின்னர் அன்றைய திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியில் எஸ்டாபோனா திரும்பினோம்.








No comments:

Post a Comment