Saturday, April 26, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 4

பாங்காக்... முதல் அனுபவம்

மாலை 18:35க்குக் பாங்கக்கில் தரையிறங்கியது நான் பீக்கிங்கிலிருந்து பயணித்து வந்த விமானம். பாங்காக் விமான நிலையம் விரிவானதாக, மிகத் தூய்மையாக ஏனைய அனைத்துலக விமான நிலையங்களின் தரத்திற்கு ஈடு செய்யும் அளவில் நன்கு அமைக்கப்பட்டிருக்கின்றது.

உள்ளூர் பயன்பாட்டிற்கு பாட்  தேவைப்படும் என்பதால் விமான நிலையத்திலேயே யூரோ பணத்தை மாற்றிக் கொண்டேன். வெளியில் சென்று மணி சேஞ்சரை தேடுவதில் என்ன சிரமம் இருக்கும் என்பதை நான் அறிந்திராததால் விமான நிலையத்திலேயே அடுத்த சில நாட்களுக்குத் தேவைப்படும் வகையில் தயார் நிலையிலிருக்க இந்த ஏற்பாடு செய்து கொண்டேன். 


பாங்காக் விமான நிலையத்தில்
பாஸ்போர்ட் பரிசோதனை முடிந்து என் பயணப் பெட்டிகளை எடுத்துக் கொண்டு அன்று இரவு நான் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதிக்கு செல்ல எப்படி பயணிக்கலாம் என்று யோசிக்கலானேன். எங்களுக்காகச் சுற்றுலா பயண குழுவில் ஏற்பாடாகியிருந்த ஹோட்டல் ஆர்ட்ட்ரியும் ஒரு நான்கு நட்சித்திர ஹோட்டல்.  பாங்காக் நகரின் மையத்திலேயே இது அமைந்திருக்கின்றது. ஆக விமான நிலையத்திலிருந்து இந்த ஹோட்டல் ஏறக்குறைய 25 கிமீ தூரத்தில் இருக்குன்றது என தகவல் மையத்தில் கேட்டறிந்து கொண்டு அங்கு செல்வதற்கு டாக்ஸி எடுப்பதுதான் சரி வரும் என ஆலோசனை கிட்டியதால் பாங்காக் விமான நிலைய டாக்ஸி பகுதிக்குச் என் பைகளை இழுத்துக் கொண்டு சென்று சேர்ந்தேன்.

அங்கு வரிசை வரிசையாக பல வரிசைகளில் உடனுக்குடன் சேவை எனும் வகையில் டாக்ஸிகளைப் பயணிகளுக்கு ஏற்பாடு செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர் ஊழியர்கள். நானும் ஒரு வரிசையில் நின்று கொள்ள 3 நிமிடங்களுக்குள் எங்களுக்கு டாக்ஸி ஏற்பாடாகியது. என்னை அழைத்துச் செல்ல வந்த ஒரு டாக்ஸி ஓட்டுனர் ஃபிக்ஸ்ட் ப்ரைஸா அல்லது மீட்டரா என கேட்க நான் மீட்டர் எனக் குறிப்பிட்டேன். மீட்டர் அதிகமாகும்.  ஃபிக்ஸ்ட் ப்ரைஸ் என்றால் 400 பாட் தான் ஆகும்  ஃபிக்ஸ்ட் ப்ரைஸ் எடுத்துக் கொள்ளுங்கள் என என்னைச் சற்றி வற்புறுத்தும் தொணியில் குறிப்பிட்டார். வேண்டாம் .. விலை அதிகமானாலும் பரவாயில்லை..மீட்டரே இருக்கட்டும் என சொல்லி விட்டேன் டாக்ஸி ஓட்டினருக்கு என் மேல் கோபம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது வாகனத்தில் நான் அமர்ந்ததுமே என்னால் உணர முடிந்தது.. 

சாலையில் சென்று கொண்டிருக்கும் போது ஏதேதோ தாய் மொழியில் சொல்லிச் சொல்லி தாமாகவே பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார் அந்த வாகனமோட்டி. கடுகடுவென முகத்தையும் வைத்துக் கொண்டார். இதென்ன வம்பாகப் போயிற்றே.. என எனக்கு சற்று வருத்தமாகிவிட்டது. இந்த நேரம் பார்த்து இடையில் மற்றொரு வாகனம் முன்னே சில நிமிடங்கள் எங்கள் வாகனத்தின் வழியை மறைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை விரட்டும் வகையில் என் டாக்ஸியோட்டி ஹோர்ன் அழுத்தி அழுத்தி அந்த வாகனத்தை விரட்டி விட்டு கையில் ஒரு கில்லியை வைத்து அந்த வாகனத்தை அடிக்க ஒரு சிறு கல்லையும் எடுத்து ஒரு கையில் வாகனத்தை ஓட்டிக் கொண்டுஅதே கையில் கில்லியைப் பிடித்துக் கொண்டும் தயார் செய்து கொண்டிருந்தார். அவர் ஒரு சண்டைக்கார பேர்வழியாக இருப்பார் போல. என்ன நடக்கப்போகின்றதோ என எனக்கு திகில். நானும்  ஏதும் பேசாமல்அமைதியாக இருந்தேன். 

நல்ல வேளையாக ஏதும் அசம்பாவிதம் நடக்கவில்லை. அந்த மற்றொரு வாகனம் சற்று நேரத்தில் இடது புறம் திரும்பி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து சென்றதால் நடக்கவிருந்த ஒரு சண்டை தடையானது. எல்லாம் கடவுள் செயல் எனத்தான் நினைக்கத் தோன்றியது.  


ஆர்ட்ரியம் ஹோட்டல்

சற்று நேரத்தில் என் ஹோட்டல் வாசலில் காரை வந்து நிறுத்தி எப்போதும் டாக்ஸி ஓட்டிகள் செய்வது போல கதவைத் திறந்து பைகளை எடுத்து வைக்காமல் தூரம் போய் தள்ளி நின்று கொண்டார் வாகனமோட்டி. ஏனென்றால் வாகனத்தில் மீட்டர் 230 பாட் தான் காட்டிக் கொண்டிருந்தது. நானே என் பயணப்பெட்டிகளை எடுத்து கொண்டு வெளியேறி கட்டணத்தைச் செலுத்தி கூடுதலாக 50 பாட் டாக்ஸி ஓட்டிக்கு கொடுத்தேன். இதைப் பார்த்ததும் கொஞ்சம் புன்னகை அவருக்கு. 

ஆர்ட்ரியம் ஹோட்டல், பாங்காக் நகர மத்தியில்  அமைந்திருக்கும் நல்ல ஹோட்டல். ஒரு நாள் இரவு மட்டும் அங்கு தங்குவதாகவும் காலை உணவுக்குப் பின்னர் அங்கு ஏற்கனவே வந்து தங்கியிருக்கும் ஏனைய பயணிகளுடனும் இணைந்து  சுற்றுலா பயணம் ஆரம்பிப்பதாகவும் ஏற்பாடாகியிருந்தது.

ஹோட்டலில் வெளியே நுழைவாசலில் அழகான சுவாமி மாடம் அமைத்திருக்கின்றனர். அங்கே சிவபெருமான் அழகுடன் காட்சியளிக்கும் உருவச் சிலையைப் பார்த்ததும் திகைத்தேன்.


சிவபெருமானுக்கு ஹோட்டல் வாசலில் சிறு மாடம்

தாய்லாந்து மக்களின் சமய வாழ்க்கையில் ஹிந்து கடவுள்களும் இணைந்து விட்டனரா என இதைப் பார்த்த போது எனக்கு எழுந்த வியப்பு அடுத்த சில நாட்களுக்குள்ளேயே தெளிவானது. விநாயகர், சிவபெருமான், பிரம்மா, காளி ஆகிய தெய்வங்கள் தாய்லாந்து மக்களின் தெய்வீக வாழ்க்கையில் இடம் பெரும் வழிபாட்டு தெய்வங்களில் கலந்து விட்டவர்கள். சிவபெருமான் அதிர்ஷ்டம் தரும் தெய்வம் என தாய்லாந்து மக்களால் கருதப்படும் ஒரு தெய்வம். 

அடுத்தடுத்த நாட்களில், மும்மூர்த்திகளில் விஷ்ணுவைக் காணவில்லையே எனத் தேடிய நான், தாய்லாந்தில் புத்தர் விஷ்ணுவின் வடிவாகவும் போற்றப்படுபர் என்று எங்கள் பயண வழிகாட்டி குறிப்பிட்ட போது சிரித்துக் கொண்டேன்.


அயோத்தையாவில் - அனந்தசயனத்தில் புத்தர்

தொடரும்..

3 comments:

Ranjani Narayanan said...

எல்லா ஊரிலும் டாக்சி ஓட்டிகள் ஒரேமாதிரிதான் போலிருக்கிறது. அனந்தசயன புத்தர் மிகவும் அழகு!

Dr.K.Subashini said...

னல்ல டாக்ஸி ஓட்டி கிடைத்தா அதிர்ஷ்டம் தான். :-)

இயற்கையை அறிவோம் said...

மிக மிக பயனுள்ள தகவல் மிக்க அருமை நன்றி ...

Post a Comment