Saturday, April 11, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -2

எத்தியோப்பிய விமானப் பணிப் பெண்களும் ஆண்களும் தமிழர்களை ஒத்த முகச்சாயலிலும்  உடல் சாயலிலுமே தென்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள். இவர்களுக்கு இந்திய ஆடைகளை உடுத்தி சாலையில் நடக்கச் சொன்னால் தமிழ் பெண்கள் என்றே எல்லோரும் ஒத்துக் கொள்வர். தலைமுடி வகையில் மட்டும் ஒரு சிறு வித்தியாசத்தைக் காண்கின்றேன். அடர்த்தியான கூந்தல் வகை இவர்களது. பெரும்பாலானோர் தோலின் நிறம் கருமையாகவும் ஒரு சிலருக்கு நிறம் மாநிறமாகவும் இருக்கின்றது. இது தென்னிந்தியர்களின் தோலின் நிரத்தை ஒத்த வகையிலேயே இருக்கின்றது.




விமானத்தில் நான் சைவ உணவு பதிந்திருந்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட உணவைப் பார்த்தபோது அதிசயப்பட்டேன். பாஸ்மதி அரிசி போல ஆனால் இன்னமும் நீளமான வடிவில் அரிசி.


பயிற்றங்காய் வருவல் அதற்கு மொச்சை, மேலும் சில கடலை வகைகள் சேர்த்த குழம்பு. உணவின் சுவையும் மலேசிய இந்திய உணவு சுவையை ஒத்ததாக அமைந்திருந்தது. நான் ஸ்டுட்கார்ட் நகரில் சாப்பிட்டு பழகிய மடகாஸ்கர் அல்லது தென்னாப்பிரிக்க உணவின் சுவையை விட இது மிக நன்றாக நமது இந்திய உணவு போல இருந்தது.

எத்தியோப்பிய மக்களின் உணவும் உடல் தோற்றமும் தென்னிந்திய மக்களின் உடல் தோற்றத்தை ஒத்திருப்பது போலவே அவர்களது அங்க அசைவுகளும் முக பாவனைகளும் கூட நமக்கு பரிச்சயமான வகையிலேயே இருந்தன. மிகுந்த சுவாரசியத்துடன் என் கண்ணில் தென்படும் ஒவ்வொரு எத்தியோப்பியர்களையும் நான் என மனதில் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தேன்.

விமானத்தின் கேப்டன் நடந்து வந்து ஒரு சிலரிடம் பேச்சுக் கொடுத்து பேசிக் கொண்டிருந்தார். நான் இருக்கும் பகுதிக்கு வந்த போது இரவு வணக்கம் சொல்லிவிட்டு சிறிது நேரம் இருந்து கதை பேசிச் சென்றார். நலல் உயரமான உருவம். எனக்கு ஒரு தமிழரிடம் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்ற உணர்விலேயே பேசினேன் என்று தான் சொல்வேன். எங்கள் பயண நோக்கம் பற்றி அறிந்து கொண்ட பின்னர் எத்தியோப்பிய நாட்டிற்கு  ஒரு முறை வந்து சுற்றிப் பார்த்துச் செல்லுமாறு கூறினார்.

அடிஸ் அபாபா விமான நிலையம் மிகச் சிறியது. நாங்கள் வந்திறங்கிய சமையம் அதிகாலையாக இருந்தமையால் பயணிகள் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது. காலை ஆறு மணிக்கெல்லாம் சூரியோதயம் ஏற்பட்டதில் மிகத் தெளிவாக பகல் வெளிச்சத்தில் நகரை பார்க்க முடிந்தது.



இந்த நாடு பாலைவனப்பகுதிக்கும் கீழே அமைந்திருப்பதால் வெயில் இருந்தாலும் மிக அதிகமான் வெப்பத்தை நான் உணரவில்லை. ஏறக்குறைய 24லிருந்து 30 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பம். வெளியே சென்று பார்க்க வாய்ப்பு அமைந்திருந்தால் மேலும் எத்தியோப்பியா பற்றி அறிந்து கொள்ள முயற்சித்திருப்பேன். ஆனால் ஒரு முறைபிரத்தியேகமாக இந்த நாட்டிற்கு சென்று வர வேண்டும் என்று மனதில்  ஆவல் வந்துள்ளது.. வாய்ப்பு அமைந்தால் எத்தியோப்பியா பற்றியும் இம்மக்கள் பற்றியும் மேலும் நேரில் அறிந்து கொள்ள அது உதவலாம்.

1 comment:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வறுமை என்றாலே எத்தியோப்பாவே நினைவுக்கு வரும் ஊடகங்கள் ஏற்படுத்திய சித்திரம் இது .உண்மை நிலையும் அதுதானா?

Post a Comment