Monday, May 4, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -9

பட்டமளிப்பு விழா நடைபெற்ற நாளின் மாலை வேறு எந்த திட்டமும் எனக்கு இல்லை. மறுநாள் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தில் செயலவைக் கூட்டம் நடைபெற இருந்ததால் மாலை ஹோட்டலிலேயே இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலரோடு பேசிக் கொண்டிருந்ததில் அன்றைய மாலைப் பொழுது இனிதே கழிந்தது.



எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த தங்கும் விடுதி மிக நேர்த்தியான மாடர்ன் வடிவில் அமைக்கப்பட்டது. உள்ளேயே ஸ்பா வசதிகள் நீச்சல்குளம்,ரெஸ்டாரண்ட் எல்லாம் அமைந்த நான்கு நட்சத்திர ஹோட்டல் அது. அறைகளும் மிக விசாலமாக மிகுந்த வசதிகளுடன் மிகத் தூய்மையாக இருந்தன. அதிலும் நான் தங்கியிருந்த அறையிலிருந்து கண்ணாடி ஜன்னல் வழியாக நோக்கினால் இந்தியப் பெருங்கடலை பார்க்க அக்காட்சியே மிக ரம்மியமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அறையில் தோழி பொன்னியுடன்  மலேசியக்கதைகளைப் பேசிக் கொண்டிருந்ததும் அன்றைய மாலைப் பொழுது  மகிழ்ச்சி நிறைந்ததாக  அமைத்தது.




மறுநாள் காலை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தில் செயலவைக் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்க இருந்ததால் காலையில் 8 மனியிலிருந்து ஹோட்டல் உணவகத்தில் உணவருந்த ஏற்பாடாகியிருந்தது. காலை உணவாக உப்புமா, சட்னி சாம்பார் ஆகியவற்றோடு மேற்கத்திய வகை காலை உணவுகளும் இருந்தன. காலையில் ஒரு காப்பி சாப்பிட்டால் ஏற்படும் மகிழ்ச்சியே தனி. அதிலும் நல்ல தென்னிந்தியவகை உப்புமா, சட்னி, சாம்பார் ஆகியவற்றோடு காப்பியும் சேர்த்துப் பருக வயிற்றையும் மனத்தையும் நிரப்பியது காலை உணவு.

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் செயலவைக் கூட்டம் தென்னாப்பிரிக்க கிளையின் தலைவர்.திரு.மிக்கி செட்டி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் குறிப்புக்களை என்னை பதியக் கேட்டுக் கொண்டனர் முக்கிய நிர்வாகஸ்தர்கள்,. இப்படி திடீரென ஒரு பணி அமைய அதில் கடமையே கண்ணாக மூழ்கிப்போனேன்.



40 வருட கால பழமை கொண்டது இந்த உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம். உலகின் பல நாடுகளில் கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் இந்த இயக்கத்தின் இந்த செயலவைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அன்று தென்னாப்பிரிக்க, ப்ரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, இந்தியா, சுவிஸர்லாந்து, மொரிஷியஸ், கனடா, ஆகிய நாடுகளிலிருந்து பிரதினிதிகள் வந்திருந்தனர்.

அன்று நடைபெற்ற கூட்டத்தில் இயக்கத்தின் யாப்பினை அமைக்கும் குழுவிற்கு தலைமை தாங்க பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர். பொன்னவைக்கோ என்னையும் அக்குழுவில் இணைத்துக் கொண்டார். ஒரு முக்கிய இயக்கத்திற்கு நம்மால் முடிந்த  வகையில் உதவ வாய்ப்பு அமைந்தது ஒரு நல்ல நிகழ்வாகவும் எனக்கு மனதில் தோன்றியது. கூட்டத்தின் இடையிலேயும் உணவுகள் வரும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர் தென்னாப்பிரிக்க குழுவினர். உணவு  பருக நீர்  என எவ்விதப் பிரச்சனையுமில்லாமல் வந்திருந்த அனைவரும் மன நிறைவு கொள்ளும் வகையில் மிக நேர்த்தியாக அந்தக் கூட்டத்தை நடத்திச் சென்றது திரு.மிக்கி செட்டியின் குழு.




மதியம் மூன்று மணிவாக்கில் இந்தச் செயலவை உறுப்பினர் சந்திப்புக் கூட்டம் முடிய மாலை அவரவர் விருப்பப்படி பொழுதைக் கழிக்கலாம் என உறுதியானது. எனக்கு நண்பர்களோடு பேசிக் கொண்டிருப்பதில் அதிக நாட்டம் இருந்ததால் என் மாலை பொழுதை அன்று  ஹோட்டல் ரெஸ்டாரண்டிலேயே நண்பர்களுடன் செலவிட்டேன்.

பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த இந்த உறுப்பினர்களுடன் பேசுவதற்கு இது ஒரு நலல் வாய்ப்பாக அமைந்தது.  உலகத் தமிழர்களின் நிலை, சமூக இயக்கக்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகள், தமிழர் வாழ்வியல் என பல விஷயங்களைத் தொட்டுப் பேசி மகிழ்ந்தோம்.

No comments:

Post a Comment