Monday, December 3, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 13


ஆத்தங்குடியை அடையும் போது மணி மதியம்  2க்கு மேல் இருக்கும். வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.

செட்டிநாட்டுக்குச் செல்வது என்று முடிவான போதே, அதாவது 2011ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களிலேயே நான், ராஜம் அம்மா, மீனா, காளைராசன் ஆகியோர் என்னென்ன இடங்களைச் சென்று நாங்கள் பார்க்க வேண்டும் என பட்டியலிட்டபோது, இந்த ஆத்தங்குடிக்கானப் பயணமும் அதில் இணைந்து கொண்டது. ஆத்தங்குடிக்கு நாங்கள் வரக்காரணமாக அமைந்தது அங்கிருக்கும் செட்டிநாட்டு கலையைப் பிரதிபலித்து நிற்கும் ஓர் இல்லம் தான்.




இந்தச் செட்டி நாட்டு வீட்டிற்கு ஏற்கனவே சென்று வந்த டாகடர்.ராஜம்  விவரமாக ஒரு பதிவு ஒன்றினை மின்தமிழில் எழுதியிருந்தார்கள். அதனை இங்கே காணலாம்.  அதனால் இந்த வீட்டிற்குச் சென்று நேரில் பார்த்து வர வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் சற்று அதிகமாக இருந்தது.

ஆக வீட்டு வாசலில் ஓர் ஓரமாக டாக்டர்.வள்ளியின் வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றோம். வீட்டில் யாரும் தற்சமயம் தங்கியில்லை. ஆனால் பாதுகாப்பிற்காக இரண்டு பெரியவரகள் நின்று கொண்டிருந்தனர். வந்த எங்களை வரவேற்று  அருந்த தண்ணீர் வேண்டுமா என்று கேட்டும் உபசரித்தனர். அவர்களுக்கு நாங்கள் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு நாங்கள் இந்த வீட்டின் கலை அழகை புகைப்படங்களும் வீடியோ பதிவும் செய்ய வந்திருக்கின்றோம் என்றும் சொல்லி அனுமதி வாங்கிக் கொண்டு உள்ளே சென்று வீட்டை சுற்றிப் பார்த்தோம்.

வீடு முழுக்க பர்மா தேக்கு மரங்களால் செய்யப்பட்ட தூண்கள். ஜப்பான் பளிங்குகள் கூரைப் பகுதியை அலங்கரிக்க இத்தாலிய பளிங்குகள் வீட்டின் தரைப்பகுதியை அலங்கரித்துக் கொண்டிருந்தன.



நீண்ட வாயில் பகுதி. அதனை கடந்து முற்றம். அங்கே ஒவ்வொரு கதவிலும் ஒரு ஓவியம். குழந்தை கண்ணன் பிறந்த கதையின்  வரலாறு ஓவியமாக கதவுகளில் அலங்கரித்துக் கொண்டிருந்தன. நானும் காளைராசனும் கண்ணனும் அவற்றை முடிந்த வரை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

வீட்டின் வளவு எனக் குறிப்பிடப்படும் பகுதிக்குச் சென்று அங்குள்ள அறைகள், அறைகளுக்கு முன் உள்ள ஆட்டுக்கல், அம்மிக்கல் ஆகியவற்றையும் பார்த்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக ஆட்டுக்கல், அம்மிக்கல். குடும்பமாக அனைவரும் சேர்ந்தே இருந்தாலும் சமையல் அவரவருக்கு தனித்தனியாகத்தான் நடக்கும் என்று டாக்டர்.வள்ளி விளக்கிச் சொன்னார்.



அந்தக் குட்டி அரண்மனை போன்ற அந்த வீட்டில் இருந்து பார்த்து ரசித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். வீட்டின் முழு ஒலிப்பதிவையும் இன்றைய மண்ணின் குரல் வெளியீட்டில் வீடியோ பதிவாக வெளியிட்டிருக்கின்றேன். அதனை இங்கே காணலாம். http://video-thf.blogspot.de/2012/12/blog-post_4.html

வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போதே பேட்டரி காலியாகிவிட்டதால்` அதிகமாக பதிவு செய்ய இயலவில்லையே என்ற வருத்தம் எனக்கு. புகைப்படங்களை ஏற்கனவே காளைராசன் மின்தமிழில் வழங்கியிருந்தார். நானும் சில படங்களை விரைவில் தனி இழையில் வெளியிடுவேன்.

அங்கிருந்து புறப்பட்டு நாங்கள் அடுத்ததாக தேவகோட்டை செல்ல வேண்டும். ஆனால் அதற்குள் வெயிலின் கடுமையால் எங்கள் அனைவருக்குமே கடும் தாகம். அங்கிருந்து சற்று நடந்து அருகில் தென்பட்ட ஒரு சிறு கடையில் குடிக்க குளிர்பானம் கேட்டு வாங்கிப் பருகினோம். ஒரு இளம் பெண் தான் கடையை நடத்திக் கொண்டிருக்கின்றார். அவரோடு கொஞ்சம் பேசினோம். அப்பப்பா.. ஒரே பேச்சு தான். வாயாடிப் பெண். எங்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு அசத்தி விட்டாள். அவளுடைய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லி முடிப்பதற்குள் மேலும் தாகம் எடுக்க மறுபடியும் ஒரு குளிர்பானம் வாங்கி அருந்தினேன். சிரித்து சிரித்து பேசி எங்களை வரவேற்று அமரச் செய்து குளிர்பானம் வழங்கிய பெண்ணின் நினைவு இன்று மனதில் இருக்கின்றது.

இனி அடுத்த இடம் தேவகோட்டை. அந்த ஊரை நோக்கி எங்கள் வாகனம் புறப்பட்டது.

இந்தப் பதிவுக்கு மேலும் தகவல வழங்கும் இரண்டு ஒலிப்பதிவு பேட்டிகள் முன்னரே மண்னின் குரலில் வெளிவந்துள்ளன. அவற்றை கேட்க கீழ்க்காணும் வலைப்பக்கம் செல்லலாம்.
நகரத்தாரின் கடல் கடந்த பயணங்கள் - 2 http://voiceofthf.blogspot.de/2012/02/2_17.html
நகரத்தாரின் கடல் கடந்த பயணங்கள் - 1 http://voiceofthf.blogspot.de/2012/02/blog-post_04.html


தொடரும்...
சுபா

No comments:

Post a Comment