Saturday, December 15, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 16


காரைக்குடிக்கு வந்து விட்டு செட்டி நாட்டு சேலை வாங்கிச் செல்லாமல் போவதற்கில்லை என்று என் மனதிற்குள் முடிவெடுத்து விட்டேன். காரைக்குடியை நெருங்கும் போதே மணி 7க்கும் மேலாகி விட்டது. டாக்டர் வள்ளியிடம் என் மனதில் உள்ள ஆசையை தெரிவித்தேன். அவருக்கும் உடன் வர ஆசை. ஆனால் நேரம் குறைவாக இருக்கின்றதே என்று வருத்தம். எனக்கு 30 நிமிடம் கிடைத்தால் போதும் தேவையான சேலைகளை வாங்கி விடுவேன் என்று சொன்னேன். அவர் நம்பவில்லை. சரி உங்கள் ஆசையை நான் ஏன் கெடுக்க வேண்டும் என்று சொல்லி காளைராசனையும் கண்ணனையும் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் விட்டு விட்டு அவர்கள் காரிலேயே கடைத்தெருவுக்குச் சென்று வருவது என்று முடிவெடுத்தோம்.

கடைத்தெருவுக்கு அருகிலேயே அவர்கள் வீடும் இருந்ததால் நாங்கள் சாலையில் இறங்கிக் கொண்டு வாகனத்தை திருப்பி அனுப்பி விட்டோம். எங்களுக்காகக் காலையிலிருந்து வாகனமோட்டிய வாகனமோட்டிக்கும் ஓய்வு தேவையில்லையா?

சாலையில் பல கடைகள் அதற்குள் சாத்தி விட்டார்கள். சற்று நடந்து வருகையில் இரண்டு பெரிய கடைகள் இருந்தன. ஒன்றில் நுழைந்தோம். எனக்கு எப்போதுமே பிடித்தது கைத்தறி சேலைகள் தான். அதனால் எனக்கு கைத்தறி சேலைகள் சிலவற்றை காட்டச் சொன்னேன். அவர் சட சட வென்று பல சேலைகளை அள்ளிக் குவித்து விட்டார்.

மனதில் சுங்குடி சேலை வாங்க வேண்டும் என்றும் எண்ணமிருந்தது. ஆனால் எத்தனை சேலைகளைத் தான் வாங்குவது? சுங்குடிச் சேலையை எடுத்துக் காட்டச் சொன்னேன். அதில்  20 வகைகள் எடுத்துப் போட்டார். அதில் மனதைக் கவர்ந்த  ஒரு நீல நிறச் சேலையை உடனே எடுத்துக் கொண்டேன். அடுத்து எனக்கு செட்டி நாட்டு கைத்தறியைக் காட்டுங்கள் அது தான் முக்கியமாக வேண்டும் என்று சற்று அழுத்திச் சொல்ல உடனே சில சேலைகளை எடுத்து வைத்தார்.

என் ரசனைக்கேற்ற சேலைகள். அதில் ஒரே டிசைனில் மூன்று சேலைகள் எடுத்துக் கொண்டேன். எனக்கு ஒன்றும் ஸ்டெல்லாவிற்கு ஒன்றும் டாக்டர்.பத்மாவிற்கு ஒன்றும் என்று மூன்று சேலைகள் ஒரே டிசைனில் வெவ்வேறு வர்ணங்களில். பின்னர் மேலும் ஒரு சேலை என் கண்களை மிகக் கவர்ந்தது. அழுத்தமான நீலத்தில் வெளிர் நீல நிறத்து செட்டி நாட்டுக் கைத்தறி சேலை. அதனையும் எடுத்துக் கொண்டேன். ஒரு சுங்குடி சேலையும், 4 செட்டிநாட்டு கைத்தறிகளும் எடுத்துக் கொண்டு அவரிடம் பில்லை கொடுத்து பணம் கட்டும் போது 20 நிமிடம் தான் ஆகியிருந்தது. டாக்டர் வள்ளிக்கு ஒரே ஆச்சரியம். இவ்வளவு சீக்கிரத்தில் 5 அழகான சேலைகளை தேர்ந்தெடுத்து விட்டீர்களே என்று சொல்லிக் கொண்டிருந்தார். மனதில் என்ன சேலை வேண்டும் என்று முன்னமே தீர்மானித்து வைத்திருக்கும் போது அதே வகையில் தென்பட்டால் உடனே எடுத்துக் கொள்ள வேண்டியது தானே..:-)))

செட்டி நாட்டு கைத்தறி சேலைகள் மிக மெண்மையானவை. அழகான வடிவத்திலும் அமைந்தவை. விலையும் மலிவு. சென்னையை விட காரைக்குடியிலேயே இன்னும் குறைந்த மலிவான விலைக்குள் நல்ல சேலைகளை எடுக்க முடிகின்றது.

சேலை வாங்கி வந்தவுடனேயே  டாக்டர்.வள்ளி அங்கேயே ஒரு தெரிந்த ஆட்டோக்காரரை பார்த்து என்னை பத்திரமாக விருந்தினர் மாளிகைக்கு அனுப்பி வைத்தார். எனது காரைக்குடி பயணத்தின் முதல் நாள் இப்படி எல்லா வகையிலும் திருப்தி அளிப்பதாக அமைந்ததில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி.

ஆசையாக வாங்கி வந்த ஒரே சுங்குடி சேலையை சென்னையில் நீண்ட நாள் சந்திக்காமல் இருந்து திடீரென சந்தித்த ஒரு நீண்ட நாள் தோழிக்கு பரிசளித்து விட்டேன்.


ஸ்டெல்லா, சுபா, டாக்டர்.பத்மா

இந்தக் காரைக்குடி செட்டிநாட்டு கைத்தறி சேலையை  டாக்டர்.பத்மா, ஸ்டெல்லா, நான் மூவருமே கடந்த சென்னை புத்தக கண்காட்சி நாளில் உடுத்தியிருந்தோம். ஆண்டோ பீட்டர் எங்களை ஒரு புகைப்படம் எடுத்தார். எல்லாம் நினைவுகளில் மறையாமல் இருக்கின்றன.

தொடரும்...


அன்புடன்
சுபா

No comments:

Post a Comment