Sunday, December 16, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 17


காரைக்குடியில் இரண்டாம் நாள் தமிழ் மரபு அறக்கட்டளையும் அழகப்பா பல்கலைக்கழகமும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் நிகழ இருந்தது. காலை பத்து மணிக்குக் கருத்தரங்கம் தொடங்குவதாக ஏற்பாடாகி இருந்தது. கருத்தரங்கம் செல்வதற்கு முன்னர் கோயில் தரிசனம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார் நண்பர் காளைராசன்.



அரியக்குடி பெருமாள் கோயில் தான் அது. பெருமாள் கோயில் என்றாலே நம் கண்ணனுக்கு மகிழ்ச்சி. அவர் முகமெல்லாம் புன்னகையுடன் அரியக்குடி பெருமாளைச் சேவிக்கச் செல்கின்றோம் என்ற பூரிப்பில் அன்று காலை இருந்தார். நான் பாலு, கண்ணன் மூவருமே காலையிலேயே தயாரானவுடன் எங்களை காளைராசன் வாகனத்தோடு வந்து அழைத்துச்  சென்றார்.





அரியக்குடி என்றாலே பெருமாள் கோயிலும் சங்கீத வித்வான் சங்கீத கலாநிதி அரியக்குடி ராமானுஜ ஐயங்காரும் ஞாபகத்திற்கு வராமல் இருக்க முடியாது. சங்கீதத்தில் சாதனை படைத்தவர் அவர். (அவரது சாமஜ வரதா என்ற பாடல் சுத்தசாவேரி ராகத்தில் கேட்டுப் பாருங்கள். http://www.youtube.com/watch?v=Ibfewrcwbaw )

காலை எட்டு மணி வாக்கிலேயே கோயிலை அடைந்து விட்டோம். பழமையான கோயில். வெளியே தோற்றத்தில் சிறிதாகத் தெரியும் கோயில் உள்ளே செல்ல செல்ல நீண்டு கொண்டும் விரிவாகியும் ப்ரமிக்க வைத்தது. வைஷ்ணவ சம்ப்ரதாயத்தைப் ப்ரதிபலிக்கும் வைஷ்ண சின்னங்கள் கோயில் முழுதும் நிறைந்திருக்கின்றன.  இந்தக் கோயில் நிர்மானிப்பில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட செட்டியார்களின் உருவச் சிலைகளும் பதிக்கப்பட்டிருக்கின்றன.



சிறுகுளத்துடையான் முருகன் செட்டியார் மகன் சேவுகன் செட்டியார்

இந்தச் சேவுகன் செட்டியார் திருவேங்கடமுடையானின் தீவிர பக்தராக இருந்திருக்கின்றார். இவரே உடையவரால் ஆராதிக்கப்பட்டதிருவேங்கடமுடையான் சிலையை இங்கே கொண்டு வந்து இக்கோயிலை கட்டி அமைத்ததாக தினமலர் பதிவு குறிப்பிடுகின்றது.  

தென் திருப்பதி என்றும் சொல்லப்படும் இந்த ஆலயத்தின் மூலவர் திருவேங்கடமுடையான்; தாயார் அலமேலு மங்கை. கோயிலின் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து ஆலயத்தின் கலை நேர்த்தியுடன் அமைந்திருந்த சிற்பங்களைக் கண்டு ரசித்தோம்.



இந்த ஆலயத்தின் மூலைக் கருடன் சின்னம் சிறப்பு வாய்ந்தது. எங்களை அங்கும் அழைத்துச் சென்று மூலைக் கருடனைக் காட்டி வணங்கிக் கொள்ளச் செய்தார் காளைராசன்.

ஆலயத்தின் வாசல் புறத்தில் நேர்த்தியான ஒரு சிறு தோட்டத்தை ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருக்கின்றனர். அங்கே செழித்து வளர்ந்திருந்த பச்சை பசேலென்ற புல் தரையும் அங்கு தாய் பசுவிடம் பால் குடித்துக் கொண்டிருந்த கன்றையும் பார்த்து நாங்கள் நால்வருமே எங்கள் மனதைப் பறி கொடுத்தோம். தாய்மை பரிவுடன் அந்தப் பசு தன் கன்றை பார்க்கும் பார்வையில் இறையருளின் கருணையையும் அனபையும் நாங்கள் உணர்ந்து மகிழ்ந்தோம்.



ஆலயத்தின் வெளிப்புறத்தில் தெப்பக்குளம் ஒன்றும் இருக்கின்றது. இயற்கை சூழல் அந்தக் காலை பொழுதில் மனதிற்கு மிக இதமாக அமைந்திருந்தது. அந்த எழில் மிகு சூழலும் இறை தரிசனமும் எங்கள் பணிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கியதாக உணர்ந்து அழகப்பா பல்கலைக்கழகத்தை நோக்கி வாகனத்தைச் செலுத்தினோம்.


தொடரும்...

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment