Saturday, December 8, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 14


தேவகோட்டைக்குச் செல்லும் பாதை மிக அழகானது. குறுகலான ஒரு வாகனம் மட்டுமே செல்லும் சாலை தான் என்றாலும் பயணத்தை ரசிக்கும் படியான சூழல் இருந்தது. சாலையில் அதிகமான வாகணங்கள் இல்லை. சாலையின் இரு பக்கங்களிலும் புளிய மரங்கள். புளிய மரத்தின் இலைகளின் பசுமை மனதில் இருந்த களைப்பை நீக்கின. பாதை நெடுகிலும் இப்படி புளிய மரங்களை நட்டு வைத்த அந்தப் புண்ணியவான்கள் யார் என்று கேட்டபோது சிவகங்கை சமஸ்தானத்தின் ஏற்பாடு அது என்று டாக்டர்.வள்ளியும் காளைராசனும் விளக்கியதில் தெரிந்து கொண்டேன்.

இந்தப் புளிய மரங்கள் மிகப் பழமையானவை. நீண்ட வயதைக் கொண்டவையாக நிச்சயம் இருக்க வேண்டும். மரங்கள் நட்டு வைத்து இயற்கை எழிலை பாதுகாக்க வேண்டும் என்று அப்போது இருந்த அந்த மனப்பாங்கு இன்று தமிழகத்தில் எங்கே சென்றது? எங்கேயாவது ஓரிருவர் மரங்கள் நட்டு அவ்வப்போது விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினால் உண்டு என்ற நிலையைத் தானே இப்போது காண்கின்றோம். இருக்கின்ற மரங்களைச் சாலையை பராமரிக்கின்றேன் பேர்வழி என்று வெட்டிப் போடாமல் இருந்தாலே போது சாமி என்று எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொள்ளும் நிலை தானே இப்போது உள்ளது.

அந்த ரம்மியமான சூழலிலேயே பயணித்து தேவகோட்டையை அடைந்தோம். வீட்டை அடைவதற்குள் திரு. ராமகிருஷ்ணன் (ஜமீந்தார்) எங்களுக்கு இடைக்கிடையே தொலைபேசியில் அழைத்து எங்கேயிருக்கின்றோம், ஏதும் ப்ரச்சனையா எனக் கேட்டு நாங்கள் நல்ல படியாக ஜமீன் வீட்டை வந்தடைய உதவினார்.

திரு.ராமகிருஷ்ணன் மிக அன்பான மனிதர். வீட்டில் சில பெண்மணிகளும் ஒரு வேலையாள் ஒருவர் மட்டுமே இருந்தனர்.

நாங்கள் வந்து சேரவும் அங்கே பாலுவும் மைக்கலும் வந்து சேரவும் சரியாக இருந்தது. திரு.மைக்கல் எனக்கு காளைராசன் வழி அறிமுகமானவர். அன்று தான் முதன் முதலில் பார்க்கின்றேன். உடனே அன்புடன் பேசிப் பழகும் நல்ல குணம் கொண்ட மனிதர். பாலு தனது அன்றைய செய்திகளையெல்லாம் என்னிடம் சொல்லி தகவல் பரிமாறிக் கொண்டார். மைக்கலும் பாலுவும் மாத்திரம் நன்கு குளித்து பளிச்சென்று இருக்க எங்கள் களப்பணி கூட்டமோ வேர்த்து  முகமெல்லாம் வாடிப்போய் இருந்தோம். ஒரு ஜமீந்தார் வீட்டிற்கு வரும் கோலத்தில் நாங்கள் இல்லையே என நினைத்து சற்று தயக்கம் மனதில் வரத்தான் செய்தது. ஆனால் அந்தத் தயக்கத்தையெல்லாம் மறக்கும் படி செய்தது திரு.ராமகிருஷ்ணனின் குடும்பத்தாரின் வரவேற்பு.


திரு.ராமகிருஷ்ணன் (வேஷ்டி அணிந்திருப்பவர்), பாலு, மைக்கல், காளைராசன், நா.கண்ணன்

தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி ஏற்கனவே திவாகர் விளக்கியிருந்தமையால் எங்கள் நோக்கம் அறிந்திருந்திருந்தார்கள். நான் வீடு முழுக்கச் சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கினார். வீட்டினை வீடியோ பதிவு ஒன்று செய்து கொண்டேன். இருட்டுவதற்குள் செய்து விடுவது நல்லது என்பதால் வந்த உடனேயே என் வேலையைத் தொடங்கி விட்டேன்.

தேவகோட்டை ஜமீன் மாளிகை பதிவு மண்ணின் குரலில் வெளிவந்த செய்தியை மின் தமிழில் இங்கே வாசிக்கலாம். https://groups.google.com/forum/?fromgroups=#!topic/mintamil/hNrFWGnZYwQ



சுபா, ஜமீந்தார் வீட்டுப் பெண்மணி, டாக்டர்.வள்ளி

அந்த ஜமீன் வீட்டில் எத்தனை எத்தனையோ அரசாங்க விஷயங்கள் நடந்திருக்கும். பல அரசியல் கூட்டங்கள் நடந்திருக்கும். பல அரச வம்சத்தினர், ஜமீன் வம்சத்தினர் வந்து போயிருப்பர் என்றெல்லாம் நினைத்துப் பார்க்கும் போது எழுந்த வியப்பும் அங்கு வந்து பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தமையை நினைத்து மன மகிழ்ச்சியும் அத்தருணத்தில் எனக்கு ஏற்பட்டது. இதேபோலத்தான் எட்டயபுர ஜமீந்தாரின் மாளிகையில் நான் சுற்றி வந்த போதும் உணர்ந்தேன். எனது எட்டயபுர பயணக் கட்டுரைப்பதிவுகளை இதுவரை வாசித்திராதவர்கள் இங்கே சென்று அதனை வாசிக்கலாம்.

அன்பான உபசரிப்பு. அதிலும் நண்பர்களோடு கூடி நின்று பேசி மகிழ்வதும் வேறு சேர்ந்து கொண்டதால் எங்களுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை. எனது வீடியோ பதிவு முடிந்தவுடனேயே எங்களுக்கு பலத்த விருந்துபசரிப்பு.

அப்பப்பா.. வியந்து போனேன் அந்த உபசரிப்பில். அதனை ஒரு தனி பதிவாக அடுத்த பதிவில் நாளை சொல்கிறேன்.. காத்திருங்கள்.


தொடரும்...
சுபா

No comments:

Post a Comment