Saturday, December 22, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 18


எனது தமிழகத்துக்கானப் பயணங்களை நான் சில மாதங்களுக்கு முன்னதாகவே எற்பாடு செய்து விடுவது வழக்கம். அந்த  வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே இவ்வாண்டு எனது ஜனவரி  தமிழக பயனத்திட்டத்தை ஏற்பாடு செய்தபோது காளைராசன் பணிபுரிகின்ற அழகப்பா பல்கலைக் கழகத்திலும் தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்த  ஒரு ஒரு நாள் கருத்தரங்கினை ஏற்பாடு செய்யலாமே என யோசனை தோன்ற அந்த ஏற்பாடுகளில் இறங்கினோம்.

பல்கலைக்கழக துணைவேந்தரின் சம்மதம் கிடைக்கப்பெற்ற பின்னர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வதில் சிரமம் இருக்க வில்லை. பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையிலேயே தங்குவதற்கான ஏற்பாட்டினையும் துணை வேந்தர் அளித்தமையால் தங்குமிடம் தேடுவதிலும் பிரச்சனைகள் ஏற்படவில்லை. த.ம.அ -வை பிரதி நிதித்து நானும் கண்ணனும் பாலுவும் பேசுவது என்று முடிவானது. பல்கலைக்கழகத்தின் சார்பில், தமிழ்த்துறை, அறிவியல் துறை, கணினித் துறை ஆகியவற்றிலிருந்தும் மேலும் வேறு சில துறைகளிலிருந்தும் பேராசிரியர்களும் ஆசிரியர்களும் கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடானது.

காலையில் 10 மணிக்கு கருத்தரங்கம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குதல், பின்னர் அறிமுக உரை, மதிய உணவு என்றும் அதன் பின்னர் இரண்டு வெவ்வேறு மண்டபங்களில் கருத்தரங்கங்களுமாக ஏற்பாடுகள் செய்தோம். இந்த ஏற்பாட்டில் எல்லா பொறுப்புகளையும் எடுத்துக் கொண்டு திறமையாக செயலாற்றி ஏற்பாட்டினை விரும்பிய படியே செய்த காளைராசனை மனமாரப் பாராட்டித்தான் ஆக வேண்டும். அவர் இந்தக் கருத்தரங்கம் சிறக்க நிகழ்ச்சிகளை அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் மாற்றி சரியான தலைப்புக்களைத் தேர்ந்தெடுத்து எங்களுக்கு வழங்கியதோடு தமிழ்த்துறை அறிவியல்துறை பேராசியர்களையும் தொடர்பு கொண்டு, அவர்களையும் உடன் சேர்த்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமானதாக ஆக்கிக் கொடுத்தார்.

11ம் தேதி காலையில் அரியக்குடி ஆலயத்தில் பூஜையை முடித்துக் கொண்டு நேராக பல்கழகத்திற்குப் புறப்பட்டோம். நேராக எங்களை துணைவேந்தர் அறைக்கு அழைத்துச் சென்று எங்களை துணைவேந்தருக்கு அறிமுகம் செய்து வைத்தார் காளைராசன். சிறிது நேரம் அலவளாவிய உடன் அனைவருமாக சேர்ந்து கருத்தரங்கம் நிகழும் மண்டபம் வந்தோம். அங்கே ஏற்கனவே பாலுவும் மைக்கலும் வந்திருந்தார்கள். அவர்களுடன் உரையாடி விட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்தோம்.

இந்தக் கருத்தரங்க நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் குத்து விளக்கேற்றி வைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.




மண்டபம் நிறைந்த மாணவர்கள், பேராசிரியர்கள். டாக்டர்.வள்ளியும், காளைராசனின் மகளும் கூட வந்திருந்தார்கள். மாணவர் முகங்களில் ஆவல். சொற்பொழிவுகளைக் கேட்டு புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் மாணவர்கள் ஆர்வத்துடன் இருந்தது முகத்தில் தெரிந்தது.


சுபா, நா.கண்ணன், துணைவேந்தர், தமிழ்த்துறைத் தலைவர்

துணைவேந்தரின் தொடக்க உரை, நா.கண்ணனின் உரை, பின்னர் எனது உரை ஆகியவை முடிந்து தமிழ்த்துறை தலைவரும் உரையாற்றினார்கள். இனிமையாக அந்தத் தொடக்க விழா நடந்தேறியது.


துணைவேந்தர் தொடக்க உரையாற்றுகின்றார்

மதிய உணவிற்குப் பின்னர் பட்டறைகள் நடைபெற்றன. பாலு கடல் ஆய்வு பற்றி பேச, நான் தற்கால கணினித்துறை தொழில்துறை வளர்ச்சி, தேவைகள் என்ற தலைப்பில் உரையாற்ற நா.கண்ண்ன த,ம.அ மின்னாக்கப் பணிகள் தொடர்பாக உரையாற்றினார்.



மாணவர்களுடன் நான்



நிகழ்ச்சி முடிந்து மாணவர்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். மாணவர்களுடன் இருப்பது எனக்கு மிக மிக பிடித்தமான ஒரு விஷயம். பல மாணவர்கள் கருத்தரங்கத்திற்குப் பின்னரும் கேள்விகள் கேட்டும் பேசிக்கொண்டும் என்னை தங்கள் அன்பினால் திக்கு முக்காடச் செய்தனர். பலர் என்னுடன் சேர்ந்து இருந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். அன்றைய பொழுதின் நினைவுகள் என் மனதில் மகிழ்ச்சியான நினைவுகளைத் தருவதாக அமைந்தது.



இந்த நிகழ்ச்சியின் வழி காரைக்குடி அழகப்பா பல்கலைகழகப் பேராசிரியர்கள் டாக்டர் சந்திரன், டாக்டர்.கண்ணன் இன்னும்பேராசிரியர்கள் பலரது அறிமுகமும் எனக்கு ஏற்பட்டது. அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுதுகளில் அவர்கள் மாணவர்களுக்காக செய்து வரும் திட்டங்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது.  இந்த இனிய வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்த நண்பர் காளைராசனுக்கு எனது நன்றிகளை இப்பதிவில் தெரிவித்துக் கொள்வது கடமைக்காக அல்ல என்பதை அவர் அறிவார்.


தொடரும்...
சுபா

No comments:

Post a Comment