Sunday, December 23, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 19


காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கம் வெற்றிகரமாக அமைந்ததில் ஏற்பாடு செய்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணைவேந்தர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோரோடு தமிழ் மரபு அறக்கட்டளையைச் சேர்ந்த எங்களுக்கும் மனம் நிறைவளிப்பதாக அமைந்தது.

கருத்தரங்கம் முடிந்ததும் வேறு என்ன செய்யலாம் என திட்டமிடத் தொடங்கியபோது அன்று மாலை வழக்கறிஞர் திரு.மைக்கல் தான் சார்ந்திருக்கும் அமைப்பின் வழி பாலுவின் ஒரு சொற்பொழிவிற்காக ஏற்பாடு செய்திருந்த தகவல் கிடைத்தது. ஆக, அந்த நிகழ்வில் கலந்து  கொள்வது என்று அப்போதே முடிவானது.

பல்கலைக்கழகத்தை விட்டு புறப்பட்டு விருந்தினர் மாளிகை வந்து தயாராகியவுடன் எங்கள் மூவரையும்  மைக்கலும் காளைராசனும் நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். காரைக்குடி நகர மையத்திலேயே அமைந்திருந்த ஒரு தங்கும் விடுதியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு முன்னதாக எங்களுக்கு வயிற்றுக்கு நல்ல உணவை மைக்கலும் காளைராசனும் ஹோட்டலிலேயே ஏற்பாடு செய்ய நாங்கள் அங்கேயே உணவருந்தி விட்டு மண்டபத்திற்கு விரைந்தோம்.



மைக்கல் உரையாற்றுகின்றார்




பாலு உரையாற்றுகின்றார்

பாலுவின் சொற்பொழிவு கடல் சார் அறிவியல் பற்றியது. அதற்கு முன்னராக சில வார்த்தைகள் கூறுமாறு என்னையும் ஏற்பாட்டுக் குழுவினர் அழைக்க சில நிமிடங்கள் பேசினேன். அதற்குப் பின்னர் நிகழ்ச்சி தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாலுவின் இந்த சொற்பொழிவு அமைந்திருந்தது. வந்திருந்த அனைவருமே சொற்பொழிவை மிகக் கவனமாகக் கேட்பதை நன்கு உணர முடிந்தது. பாலு தயார் செய்திருந்த  பவர் பாவிண்ட் ப்ரிசெண்டேஷன் மிக விளக்கமாக கடல் ஆய்வு, தமிழர் தொண்மை ஆகியனவற்றை விளக்குவதாக அமைந்திருந்தது. நலல்தொரு நீண்ட விளக்கம் மிகுந்த சொற்பொழிவைக் கேட்டதில் எனக்கும் மகிழ்ச்சி.


கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழார்வலர்கள்


ஏற்பாட்டுக் குழுவினருடன் நாங்கள்

ஜனவரி 11ம் நாள் இவ்வகையாக அரியக்குடி பெருமாள் கோயில் தரிசனத்துடன் ஆரம்பித்து பல்கலைக்கழத்தில் கருத்தரங்கத்தை வெற்றிகரமாக முடித்து மாலை அரியதொரு சொற்பொழிவையும் கேட்கும் வகையில் மிகத் திருப்தியாக பயனுள்ள வகையில் அமைந்தது.

இவ்வகையாக காரைக்குடியில் இரண்டு நாட்கள் எனக்கு முழுக்க முழுக்க வெவ்வேறு விஷயங்களாக அமைந்து அலுப்பு என்பதையே மறக்க வைத்து விட்டது என்றே சொல்வேன். மூன்றாம் நாள்.. எனது காரைக்குடி பயணத்தின் இறுதி நாள்.. மூன்றாம் நாள் மாலை  நான் சென்னைக்குப் புறப்பட வேண்டும். ஆனால் அந்த மூன்றாம் நாளும் செய்து முடிக்க சில திட்டங்களைத் தீட்டினோம் நானும் காளைராசனும்.



தொடரும்...

சுபா

No comments:

Post a Comment