Sunday, December 9, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 15

தமிழ் நாட்டில் களப்பணி அனுவங்கள் என்றுமே மறக்க முடியாத அனுபவங்களைக் கொடுப்பவை. இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். தேவகோட்டையில் இருந்த அன்றைய மகிழ்ச்சி என் மணக்கண்ணில் வந்து போகின்றது. 

நீளமான சாப்பாட்டு மேசை. அதில் வந்திருந்த எங்கள் அனைவரையும் கூப்பிட்டு சாப்பிட அமர்த்தி விட்டார்கள். பெரிய வட்டமான சாப்பாட்டு தட்டு எங்களுக்கு. அதில் வரிசையாக ஒவ்வொன்றாக உணவு வகைகள் வந்து சேர்ந்தன. ஜமீந்தார் வீட்டுப் பெண்மணிகள் சட் சட்டென்று அந்த தட்டை நிறைத்ததே கண் கொள்ளா காட்சி. முதலில் கொழுக்கட்டை. அதோடு ப்ரெட் கட்லெட், தோசை, அதற்கு சாம்பார், சட்னி வகைகள், மிளகாய் துவையல், பொடி. இவையெல்லாம் போதாதென்று மக்கரோணி வருவல் வேறு.

Inline image 1

அந்தக் கொழுக்கட்டையின் அழகு இருக்கின்றதே... என்ன சொல்வது? வழு வழுப்பான மேல் பாகம். தயாராகி வந்தவுடன் சொட்டு எண்ணையோ நெய்யோ தேய்த்திருப்பார்கள் போல. பள பளவென்று ஜொலித்துக் கொண்டிருந்தது. உள்ளே பருப்பு பூரணம். பாதி வெடித்து தெரிந்த அந்தக் கொளுக்கட்டையைப் பார்த்ததும் முன்னர் எங்கள் அம்மா செய்யும் மோதகம் ஞாபகம் வந்தது. அதில் வட்ட வடிவத்தில் பூரணத்தை உள்ளே வைத்து அம்மா செய்வார்கள். ஆனாலும் இந்தப் பளிச்சிடும் வெள்ளையை நான் பார்த்ததில்லை. அவ்வளவு அழகு.  அந்த கொழுக்கட்டையை சமோசா செய்வது போன்ற வடிவில் செய்து நேர்த்தியாக அதனை மடித்திருந்த விதமும்  கொழுக்கட்டையின் கவர்ச்சியை அதிகரித்தது. நான் எத்தனை கொழுக்கட்டைகள் அன்று சாப்பிட்டேன் என்று தெரியாது. ஆனால் இரண்டுக்கும் மேல் சாப்பிட்டேன் என்பது ஞாபகம் இருக்கின்றது.

Inline image 2

மக்கரோணி இத்தாலியன் உணவு ஆயிற்றே. அது எப்படி காரைக்குடிக்கு வந்தது என்று வியந்து கேட்டால், எங்க செட்டி நாட்டிலே மக்கரோணி 1940லிருந்தே வழக்கத்திலே இருக்கே" என்று ஒரு அதிசய செய்தியை சொல்லி வைத்தார் அந்த வீட்டுப் பெண்மணி. இது எப்படி சாத்தியமானது என்று ஆச்சர்யமாக இருந்தது. பர்மாவுக்கான இவர்களது போக்குவரத்தினாலும், தொடர்ந்த பல கடல் பயணங்களின் தாக்கத்தாலும் இந்த உணவு அவர்கள் உணவு பாரம்பரியத்தில் இணைந்திருக்க வாய்ப்பிருக்கின்றது. அதோடு அதை சமைத்திருந்த விதம் மலேசிய மீ கோரெங், சார் கொய் தியாவ் வகை நூடல் பிரட்டல் வகையை ஞாபகப் படுத்துவதாக இருந்தமை இது அவர்களின் வெளி நாட்டு தொடர்பின் விளைவு என்பதை மிகத் தெளிவாகக் காட்டியது.

Inline image 3

சுடச் சுட தோசை தட்டில் வந்து விழுந்தது. நெய்யில் பள பளக்கும் தோசை. அதற்கு சட்னி வகைகளும் சாம்பாரும் என தட்டில் சேர, அதனையும் விடாமல் சாப்பிட ஆரம்பித்தேன். சூடான தோசை அதற்குக் கெட்டியான தேங்காய் சட்னி, மிளகாய் சட்னி என்றால் நான் எல்லாவற்றையும் மறந்து  அந்தச் சுவையை ரசிப்பதிலேயே என் மனம் செல்லும். அதிலும் அன்றைக்கோ நல்ல அலைச்சல் வேறு. மதியம் குன்றக்குடியில் சாப்பிட்டிருந்தமையால் முதலில் பசி தோன்றவில்லை. ஆனால் இந்தக் கண்களைக் வரும் வாசனை நிறைந்த உணவு வகைகளைப் பார்த்த பின்னர் பசி ஓடி வந்து ஒட்டிக் கொண்டது.

Inline image 4

ஜெர்மனியில் இலங்கைத் தமிழர்கள் வீடுகளில் கட்லெட் என்பது பொதுவாக எல்லா விருந்து வைபவங்களிலும் இருக்கும்.  தமிழக நண்பர்கள் வீட்டில் பொதுவாக இதனை நான் சுவைத்ததில்லை.இந்த ப்ரெட் கட்லெட் பொதுவாக நான் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு அல்ல. ஸ்பெயின் மற்றும் அதன் தீவுகளான கனேரி தீவுகளில் இவ்வகை உருளைக்கிழங்கு கட்லெட்கள் சற்று ப்ரசித்தி. எனது லா பல்மா தொடரில் கூட க்ரோக்கெட் பற்றி சொல்லியிருந்தேன். அதுவும் இவ்வகையான ஒரு உணவு வகையே. பல்வேறு நாடுகளில் வழக்கில் உள்ள உணவு வகைகள் மற்ற பிர நாடுகளுக்குச் செல்லும் போது அதில் சில மாற்றங்களுடன் உள்ளூர் உணவு பழக்கத்திலும் சேர்ந்து கொள்கின்றது என்பதற்கு இங்கே நாங்கள் சுவைத்த மக்கரோணியும்  கட்லெட்டும் நல்ல உதாரணம். கண்களுக்குக் கவர்ச்சியாக இருந்த அந்தப் ரெட் கட்லெடில் உதாரணத்திற்கு ஒன்றினை சாப்பிட்டு சுவைத்தேன். நல்ல சுவை. 

Inline image 5

இவற்றையெல்லாம் சாப்பிட்டாலும் இறுதியில் காப்பி வாங்கி குடிக்காமல் எனது சாப்பாடு என்றும் முடியாது. ஆக ஆசைக்கு மீண்டும் ஒரு முறை காப்பியைக் கேட்டு வாங்கி அருந்தினேன். தேவகோட்டை ஜமீந்தார் வீட்டு உபசரிப்பில் மனமும் நிறைந்தது. வயிறும் நிறைந்தது.

அப்போதே ஆறு மணியை நெறுங்கிக் கொண்டிருந்தது. தேவகோட்டையிலிருந்து புறப்பட்டால் தான் தக்க சமயத்தில் காரைக்குடி பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையை அடைய முடியும் என்பதோடு மறு நாள் நிகழ்ச்சிகளைப் பற்றி திட்டமிட முடியும். ஆக தேவகோட்டை ஜமீந்தார் குடும்பத்தினரிடம் எங்கள் நன்றியை தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டோம். 

மறு நாள் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் கருத்தரங்கம் ஏற்பாடாகியிருந்தது. அதற்கு முன்னர் கோயில் வழிபாட்டினை காளைராசன் ஏற்பாடு செய்திருந்தார். மாலை ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சியும் வேறு. அதற்கு மறு நாள், அதாவது மூன்றாம் நாள் மற்ற பிற திட்டங்கள் மனதில் இருந்தன. அதோடு மூன்றாம் நாள் மாலை நான்காரைக்குடியிலிருந்து சென்னை புறப்பட வேண்டிய நிலையும் இருந்தது. 

இதில் எப்போது நான் காரைக்குடி கடை தெருவிற்குச் சென்று செட்டி நாட்டு சேலையை வாங்குவது என்ற ஒரு கவலை மனதில் வர ஆரம்பித்தது.எப்படியாகினும் இன்றே அதனையும் முடித்து விட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

தொடரும்.....

சுபா

2 comments:

Thiagarajan said...

Images yet to Be Linked ?

இராஜராஜேஸ்வரி said...

ரசித்துப் பகிர்ந்த நினைவலைகள் அருமை .. பாராட்டுக்கள்..

Post a Comment