Wednesday, June 13, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 13

அங்கோரில் சில நாட்கள் - 13
17.மே.2018
கட்டுமரம் உணவகம் வந்த போது அங்கு உலகத் தமிழர் மாநாட்டிற்காக வந்திருந்த மேலும் சில நண்பர்களும் அமர்ந்திருந்தனர். எல்லோருக்குமே பசி என்பதால் மதிய உணவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டே ஒருவரோடு ஒருவர் அறிமுகமும் செய்து கொண்டோம். முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தது போல சாம்பாரின் சுவையைப் பாராட்டிக் கொண்டே எங்கள் உரையாடலும் தொடர்ந்தது.

பேஸ்புக் வழி அறிமுகமான சென்னை நண்பர் திரு.காந்தி, தென்புலத்தார் குழும நண்பர் சிவக்குமார் என மேலும் பலருடன் தமிழ் பற்றியும் உலகளாவிய தமிழர் அமைப்புக்கள் பற்றியும் எமது தமிழ் மரபு அறக்கட்டளை செயல்பாடுகள் பற்றியும் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டோம். அந்தக் குறுகிய நேரத்தில் அறிமுகத்தை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக ஒரு டுக் டுக் வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு அங்கோர் தேசிய அருங்காட்சியகம் செல்லப் புறப்பட்டோம்.

ஏனைய நண்பர்களும் அருங்காட்சியகம் வர ஆர்வம் காட்டவே எல்லோருமாக எங்களுக்காக திரு.ஞானம் ஏற்பாடு செய்திருந்த வாகனத்திலேயே பயணம் செல்வது என முடிவாகியது.

இந்த அங்கோர் தேசிய அருங்காட்சியகம் பற்றிய விரிவான எனது கட்டுரையை இங்கே வாசிக்கலாம் (http://subas-visitmuseum.blogspot.com/2018/05/109.html). இந்த அருங்காட்சியகத்தில் உள்ள 1000 புத்தர் சிற்பங்கள், கல்வெட்டுக்கள், அங்கோர் வாட் சரித்திரம், க்மெர் பேரரசு காலத்தைய சிற்பங்கள் என அனைத்துமே மிகச்சிறப்பானவை. பௌத்த, வைணவ, சிவ வழிபாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய ஏராளமான அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. எட்டு அறைகளில் இங்கு கண்காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தெற்குப் பகுதியிலிருந்து கம்போடியாவிற்குச் சென்ற பழம் கலைகளும் பௌத்த, வைணவ சிவ வழிபாடுகளும் தான் கம்போடியாவின் பாரம்பரியத்தின் அடித்தளத்தை வடிவமைத்த பண்பாட்டு அமைப்பாகும். கோயில் கட்டுமானம், சிற்ப வடிவமைப்பு, வழிபாட்டுக் கூறுகள் ஆகியனவற்றுள் முழுமையாகப் புதைந்து கிடக்கும் இக்கூறுகளை விரிவாக ஆராய்ச்சிக்குபடுத்தப்பட வேண்டியது மிக அவசியம். கம்போடியாவின் க்மெர் மொழியில் உள்ள பாலி, சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளின் தாக்கம் பற்றிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கடல்வழி வணிகத் தொடர்புகள், நில வழித் தொடர்புகள், வணிகச் சான்றுகள், ஆகியன சேகரிக்கப்பட வேண்டும். இத்தகைய முயற்சிகளில் தமிழகத்தின் கல்விக்கழகங்களில் இயங்கும் தமிழ், கடல்சார் ஆய்வு மற்றும் வரலாற்றுத் துறைகள் ஆர்வம் காட்ட வேண்டும்.

கம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு கம்போடியப் பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் இருக்கை உருவாக்கத்திற்கான தொடக்க நிலைப் பேச்சுக்களுக்கு வித்திட்டுள்ளது. இதனைச் சாத்தியப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டியதும், ஒரு திட்ட ஆய்வுக்குழு உருவாக்கப்படுவதும் தேவையும் உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டியதும் ஆகும். ஒரு பல்கலைக்கழக தமிழ் இருக்கையை உருவாக்குவதன் வழி இங்கு சீரிய வகையில் கம்போடியாவிற்கும் பண்டைய தமிழகத்துக்குமான வரலாற்றுச் சமூகவியல் ஆய்வுகளை ஆய்வுத்தரத்துடன் நாம் முன்னெடுக்க வாய்ப்பு அமையும்.












தொடரும்..
சுபா

No comments:

Post a Comment