Thursday, June 7, 2018

கம்போடியா - அங்கோருக்குச் சென்ற கதை -9

அங்கோருக்குச் சென்ற கதை - 9
17.மே.2018

தொன்லே சாப் ஏரியிலிருந்து நாங்கள் ஒரு புராதனக் கோயிலைப் பார்க்கப் புறப்பட்டோம். இன்று கம்போடியாவில் காணக்கிடைக்கின்ற கோயில்களில் மிகப் பழமையானது இக்கோயில். ஆக் யோம் (Ak Yum) என்பது இக்கோயிலின் பெயர். இதனை க்மெர் மன்னன் முதலாம் ஜெயவர்மன் கட்டியதாக விக்கிப்பீடியா குறிப்பு (https://en.wikipedia.org/wiki/Ak_Yum) ஆய்வாளர் Helen I Jessup (2004) அவர்களின் Art & Architecture of Cambodia என்ற நூலின் அடிப்படையில் குறிப்பிடுகின்றது. முதலாம் ஜெயவர்மனின் ஆட்சிக்காலம் கி.பி 657-690. ஆக, இந்தக் காலகட்டத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம். எங்களுடன் வந்த எங்கள் பயண வழிகாட்டி இது இரண்டாம் ஜெயவர்மன் கட்டிய கோயில் எனக்குறிப்பிட்டு கி.பி 8ம் நூற்றாண்டு எனக் குறிப்பிட்டார். ஆக, இக்கோயிலைப் பற்றிய காலத்தை உறுதி செய்வதில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன என்பதை அறியமுடிகின்றது. ஆயினும் மிகப் பழமையான கோயில் இது என்பதில் ஐயமில்லை.

படிக்கட்டுக்கள் போல கட்டப்பட்டு சற்றே பிரமிட் வடிவில் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே சீரான அளவிலான செங்கற்களும் கருங்கல்லும் கொண்டு இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வலைப்பக்கம் (https://www.siemreapcambodia.org/angkor-temp…/prasat-ak-yum/) இங்குள்ள கல்வெட்டுக்களின் குறிப்புக்களின் படி இது இந்துமதக் கடவுளான கம்பீரேஸ்வரருக்கு அமைக்கப்பட்ட கோயில் எனக் குறிப்பிடுகின்றது.

பிரமிட் போன்ற அமைப்பு தொன்மையான கோயில் கட்டுமான அமைப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பண்டைய நாகரிகங்களில் குறிப்பாக எகிப்திய, தென் அமெரிக்க மாயன் வழிபாடுகளில் இதே போன்ற கட்டுமானத்தைக் காண்கின்றோம். இந்த செங்கல் அமைப்பு தமிழகத்து செங்கற்றளிகளை நினைவு படுத்துவதாக இருக்கின்றது. தமிழகத்தின் செங்கல் உருவாக்க முறைகளைக் கற்று இக்கோயில் கட்டுமானத்தை உருவாக்கியிருக்கலாம் என்ற எண்ணம் எழுகின்றது.

தோழர் மலர்விழி பாஸ்கரன் எங்கள் பயண வழிகாட்டி விளக்கியபோது அதனைப் கைப்பேசியில் பதிவாக்கினார். அப்பதிவைக்காணலாம். 


தொடரும்..
சுபா

No comments:

Post a Comment