Tuesday, June 19, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 16


18.மே.2018

இன்று நமக்குக் கிடைக்கின்ற கம்போடியாவைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் கம்போடியா மற்றும் மெக்கோங் நதிக்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுப் பணிகளில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் வழங்கப்படுபவை. கம்போடியாவில் கடந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுப் பணிகள் விரிவான பல செய்திகளையும் க்மெர் அரசின் மன்னர்களைப் பற்றியும் கல்வெட்டுச் சான்றுகளை வழங்கியதால் தான் கம்போடிய அங்கோர் நாகரிகம் 'கம்போடியர்களால்' தான் உருவாக்கப்பட்டது என்ற உண்மை உலகிற்கு வெளிச்சமாகியது.

அதற்கு முன்னர், அங்கோர் நகருக்கு வந்த ஐரோப்பியர்கள் இவை ரோமானியப் பேரரசின் கட்டுமானப் பணி என நம்பினர். கம்போடியர்களுக்கு இத்தகைய மாபெரும் கட்டுமானங்களை கட்டக் கூடிய தொழில்நுட்ப அறிவும் திறனும் இருக்க வாய்ப்பில்லை என்பதே அவர்களது சிந்தனையாக இருந்தது. இந்த சிந்தனையை அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புக்களே மாற்றின. அங்கோர் நகர நாகரிகம் கம்போடியர்களால் கட்டப்பட்டது என்பதும், இங்கு மாபெரும் ஒரு பேரரசு ஆட்சி செய்தது என்றும், அந்தப் பேரரசு கலையையும் விவசாயத்தையும், வளர்த்தது என்பதையும் உலகமறிய தொல்லியல் அகழ்வாய்வுகளே ஆதாரமாகின.

இதே போன்ற நிலையைத்தான் தமிழர்கள் நாமும் அனுபவிக்கின்றோம். கீழடியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுப் பணி இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னரே நகர நாகரிகம் ஒன்று கீழடியில் இருந்தது என்பதை உறுதி செய்கிறது. மக்களின் உயர் நாகரிக வாழ்க்கை நிலையை விவரிக்கும் 5000க்கும் மேற்பட்ட அகழ்வாய்வுத் தொல்சான்றுகள் இங்கு கண்டு பிடிக்கப்பட்டன. நிகழ்த்தப்பட்ட 110 சதுர அடிப்பகுதியில் கிடைத்த ஆதாரங்களே கீழடியின் உயர் தனி வாழ்வியல் முறை நாகரிகத்தை உலகுக்குக் காட்டும் கண்ணாடியாக அமைந்திருக்கின்றதென்றால் இன்னும் விரிவாக இப்பகுதியில் அகழ்வாய்வுகள் நிகழ்த்தப்படும் போது தமிழின் தொண்மையை விளக்கும், தமிழரின் நாகரிகத்தின் பெருமையை உயர்த்தும் பல சான்றாதாரங்கள் ஆய்வுலகுக்கு கிட்டும். ஆனால் கீழடி அகழ்வாய்வுப் பணிகள் எதிர்நோக்குகின்ற சிக்கல்களோ ஒன்றுக்குப் பின் மற்றொன்றாக முளைப்பதும், பல தடைகள் இப்பணி தொடர முடியாதவாறு ஏற்படுவதும் இச்சான்றுகள் வெளிவருவதில் தடைகளை ஏற்படுத்தும் திட்டங்கள் பின்னனியில் இயங்குவதைத் தான் காட்டுகின்றன.


கி.பி.16ம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க சமயத்தைப்பரப்பும் பணிக்காக ஆசிய நாடுகள் பலவற்றிற்கு வந்த போர்த்துக்கீசியர்களில் ஒரு சிறிய குழு கம்போடியா வருகின்றனர். இக்குழுவில் இருந்த வர்த்தகர்களும் சமயப்போதகர்களும் காட்டுக்குள் சிதலமடைந்து கிடக்கும் அங்கோர் வாட் கோயில் வளாகத்தையும் மற்றும் இந்த நகரத்தின் பெரும்பகுதியையும் கண்டு வியக்கின்றனர். அவர்களில் ஒருவர் அந்தோனியோ ட மெக்டலெனா (Antonio da Magdalena). மூன்றாண்டுகளுக்குப் பின்னர் இவர் ஆசிய நாடுகளுக்கான அதிகாரப்பூர்வ வரலாற்றாசியராக அன்று நியமிக்கப்பட்டிருந்த டியாகோவிற்கு (Diago do Couto) தான் கம்போடியாவில் பார்த்த அங்கோர் நகரைப் பற்றி விவரிக்கின்றார். அதற்குப் பின் கம்போடியா, சியாம் ஆகிய நாடுகளுக்கு வந்து சென்ற மதம் பரப்பும் பணியாளர்களும் அங்கோர் நகரைப்பற்றியும் அங்கு காட்டுக்குள் புதைந்து கிடக்கும் அங்கோர் கோயில்கள் பற்றியுமான குறிப்புக்களை எழுதி வைக்கின்றனர். ஆனால் ஒருவர் கூட இந்தக் கோயில் நகரம் உள்ளூர் கம்போடியர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் மாமன்னன் அலெக்சாண்டர் வந்து கட்டியிருக்கலாம் என்ற எண்ணத்திலேயே பதிந்து சென்றிருக்கின்றனர். இது, இத்தகைய மாபெரும் கட்டுமானத்தை கம்போடியர்கள் கட்டவா முடியும், என்ற ஒரு வித மேற்குலக உயர்குல சிந்தனையின் வெளிப்பாடு தானேயன்றி வேறு என்னவாக இருக்க முடியும்??

இன்று நாம் காணும் அங்கோர் நகர் என்பது குலென் மலைப்பகுதியிலிருந்து தொன்லே சாப் ஏரி வரைக்கும் விரிந்திருக்கும் நிலப்பகுதி. அங்கோர் என்ற சொல் நகரா, நகரம் என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து தோன்றியது என எங்கள் பயண வழிகாட்டி விளக்கமளித்தார். இணையத்திலும் நூல்களிலும் கூட நகரா என்ற சொல்லின் அடிப்படையில் உருவாகியிருக்கலாம் என தகவல்கள் குறிப்பிடுகின்றன. நகரா என வழக்கில் இருந்ததா, அல்லது நாகர் என வழக்கில் இருந்ததா என ஆராய வேண்டியது அவசியமாகின்றது. ஏனெனில், அங்கோர் கோயிலின் பல பகுதிகளில்  நாக வடிவங்களைக் காண முடிகின்றது. பாயோன் கோயிலிலும் அங்கோர் சின்னங்கள் பலவற்றிலும் இறைவடிவங்களிலும் நாகத்தின் சின்னம் இணைந்து காணப்படுகின்றது. நாகர் இனமக்களின் வழிதோன்றல்களே இன்றைய இந்தியா முழுமைக்கும் இருந்த பூர்வகுடிகள் என்பதை ஆய்வுகள் வழி அறிகின்றோம். கம்போடிய பூர்வகுடிகளும் நாகர் வழித்தோன்றல்களாக இருந்திருக்கலாம் என்றும், அதன் ஒரு கூறாக நாக வழிபாட்டினை ஏற்றுக் கொண்ட, பிரதிபலிக்கின்ற சமய நிலையை உள்ளடக்கிய பண்பாடாக க்மெர் பண்பாடு வளர்ந்திருக்கின்றதோ என்பதும் அதன் அடிப்படையில் நாகர் என்ற சொல் வழக்கில் இருந்து அது படிப்படியாக அங்கோர் என மறுவியதோ என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. இது ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

குறிப்புக்கள்: The civilization of Angkor by Charles Higham












தொடரும்..
சுபா

No comments:

Post a Comment