Monday, June 4, 2018

கம்போடியா - அங்கோருக்குச் சென்ற கதை -7

அங்கோருக்குச் சென்ற கதை - 7
17.மே.2018
பட்டுத்தொழிற்சாலையிலிருந்து எங்கள் பயணம் மீண்டும் தொடர்ந்தது. கம்போடியாவின் இயற்கை வளங்களில் ஒன்று தொன்லே சாப் ஏரி. தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய ஏரி இது. கம்போடியத் தலைநகரான புனோம்பெண்ணிலிருந்து அங்கோர் வாட் வரை விரிந்திருக்கும் பெரிய ஏரி. விமானத்தில் சியாப் ரீப் நகரை அடையும் போதே மேலிருந்து தொன்லே சாப் ஏரியை பார்த்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டேன். ஆனால் முதல் நாளே இந்த ஏரிக்குச் சொல்வோம் என நான் நினைத்துப் பார்க்கவில்லை. எதிர்பாராத விசயங்கள் நம் வாழ்வில் நடப்பது தான் நம் வாழ்வின் சுவாரசியம், அல்லவா?
தென்கிழக்காசியாவின் மிக நீண்ட நதி மெக்கோங் நதி. சீனா, மியன்மார், லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா ஆகிய ஆறு நாடுகளைக் கடந்து சீனப் பெருங்கடலில் கலக்கின்றது மெக்கோங் நதி. சில ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து சென்றிருந்தபோது மொக்கோங் நதியைக் கடந்து சீன நிலப்பரப்பைப் பார்த்துக் கொண்டே படகுச் சவாரி செய்து லாவோஸ் சென்றடைந்தேன். மிக அடர்ந்த நதி. அதன் நீரோட்டத்தின் வேகம் அச்சமூட்டும். இந்த மெக்கோங் நதியை தொன்லேசாப் ஏரியுடன் இணைக்கும் நதியும் தொன்லே சாப் நதி என்றே அழைக்கப்படுகின்றது.
கம்போடியா விவசாயிகளின் வாழ்வாதாரம் இந்த ஏரி எனலாம். உள்ளூர் தேவைக்கான பாதிக்கும் மேற்பட்ட விவசாயத்தேவைகளுக்கு இந்த ஏரியே அடிப்படையாக அமைந்திருக்கின்றது. இந்த ஏரியில் பிடிக்கப்படும் மீன்கள் கம்போடிய மக்களின் உணவுத்தேவைக்கும் பங்களிக்கின்றது.
தமிழகத்தின் பண்டைய பல்லவ, சோழ மன்னர்களைப் போல ஏரிகளை சீரமைத்து, நீர்க்கால்வாய்களைச் சீரமைத்து விவசாயத்திற்குத் தேவையான நீர்வளத்தை கம்போடியாவின் பண்டைய க்மெர் பேரரசை ஆண்ட மன்னர்களும் செய்திருக்கின்றனர். விவசாயம் தான் மக்களின் வாழ்வாதாரம் என்பதைப் புரிந்து கொண்டதன் பலனாக அவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு நாட்டின் நீர்வளங்களிளை மேம்படுத்தியிருக்கின்றனர்.
தொன்லே சாப் ஏரியைப் பார்த்த போது சென்னையில் கட்டிடங்கள் கட்டப்பட்டு அழிக்கப்பட்ட ஏரிகள் தான் என் நினைவிற்கு வந்தன. எத்தனை ஏரிகளும் குளங்களும் நீர் நிலைகளும் நிறைந்த பூமி தமிழகம்? இன்று இவை ஏன் பராமரிக்கப்படுவதில்லை? நாட்டின் நீர் நிலைகளைக் கண்டறிந்து அவற்றை சீர்படுத்தி ஏரிகளைத் தூர்வாரி, ஆறுகளைச் செழிப்பாக்கி பாதுகாக்க வேண்டிய பெறும் பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. ஆனால் நாமோ காவேரி நீர் இன்று கிடைக்குமா நாளை கிடைக்குமா என்றல்லவா போராடிக் கொண்டிருக்கின்றோம். தமிழகத்தில் இயற்கையாக அமைந்த எல்லா நீர்நிலைகளையும் மழைக்காலம் வருவதற்கு முன் மேம்படுத்தி வைத்தால் தமிழக விவசாயத்துக்கு அது மிக உதவுமல்லாவா? இதை ஏன் யோசிக்க வேண்டியவர்கள் யோசிப்பதில்லை???















தொடரும்..
சுபா

No comments:

Post a Comment