Friday, June 1, 2018

கம்போடியா - அங்கோருக்குச் சென்ற கதை -5

17.மே.2018

கட்டுமரம் உணவகம் சென்று சேர்ந்தோம். நான்கு பகுதிகளைக் கொண்ட ஒரு உணவகம் அது. வாசலில் குத்து விளக்கு ஏற்றப்பட்டு நடராஜர் சிலை வைக்கப்பட்டு மலர்கள் தூவி அலங்கரிக்கப்பட்டிருந்தது. தனியாக ஒரு பாத்திரத்தில் தாமரை மலர்களும் இருந்தன.

என்னுடன் வந்த மலர்விழிக்குப் பசியில்லை என்று சொல்லி விட்டார். எனக்கு காப்பி சாப்பிட்டே ஆகவேண்டும் என்று ஆவல். ஆக காபி சாப்பிட்டு விட்டு திரு.ஞானம் அவர்களைப் பார்த்து அறிமுகப்படுத்திகொண்டு பின்னர் அருங்காட்சியகம் சென்று விடலாம் என்ற நினைப்போடு கட்டுமரம் உணவகத்திற்குள் நுழைந்தோம்.

ஆரம்பமே நல்ல வரவேற்பு. உணவகத்தில் பணிபுரியும் ஒரு இளைஞர் அன்புடன் வரவேற்றார். ”கிச்சடி இருக்கின்றது அக்கா. சாப்பிடுங்கள்” என்ற அன்பான உபசரிப்பைத் தட்டிக் கழிக்க மனம் வரவில்லை. கிச்சடியோடு மணக்கும் சாம்பார் வேறு. இந்த சாம்பாருக்காகவே கட்டுமரம் உணவகத்திற்கு மீண்டும் மீண்டும் செல்லலாம் எனச் சொல்லும் அளவிற்கு அப்படி ஒரு ருசி. பரங்கிக்காய், கம்போடிய முருங்கை, தக்காளி எல்லாம் கலந்து சுவையாக இருந்தது. ஏன் கம்போடிய முருங்கை எனச் சொல்கின்றேன் என்றால், அது நாம் பழக்கப்பட்ட சுவையில் இல்லை. சற்று கடினமாகவே இருந்தது. உணவகத்தில் பனிபுரியும் அந்த இளைஞர் மதுரைக்கு அருகே நத்தம் என்ற ஊரிலிருந்து வந்தவர் என்று தெரிந்தது. இது மதுரை நத்தம் பகுதி கைவண்ணம் போலும் என நினைத்துக் கொண்டேன்.

சாப்பிட்டு விட்டு புறப்பட வந்த எங்களை திரு.ஞானம் வந்து வரவேற்றார். நாங்கள் சுற்றிப்பார்க்க ஒரு வேன் ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லி காலை 10 முதல் மதியம் 2 வரை நன்றாக சில இடங்கள் சென்று பார்த்து வாருங்கள் எனக் கூறி ஒரு கம்போடிய வழிகாட்டியையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். சற்று நேரத்தில் மேலும் சில விருந்தினர்களும் எங்களுடன் இணைந்தனர். மலேசியாவிலிருந்து வந்திருந்த நண்பர் ராஜா பிள்ளை, அவரது நண்பர், திருச்சியிலிருந்து வந்திருந்த உளவியல் மருத்துவர் கார்த்தியாயினி அவரது குடும்பத்தார் என அனைவரும் புறப்பட்டோம்.

வாசலுக்கு வரும் போது வேகமாக ஒரு பெண்மனி உள்ளே வந்து கொண்டிருந்தார். அவர்தான் திருமதி.தாமரை. இந்த உணவகத்தின் உரிமையாளர்களில் ஒருவர். சிரித்த முகம். எல்லோரையும் அன்புடன் வரவேற்கும் பாங்கு, எந்த அழுத்தமும் இல்லாமல் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் ஆடி ஓடி பணிபுரியும் பண்பு என.. இவரைப் பார்த்ததுமே எல்லோருக்கும் பிடித்துவிடக்கூடிய குணம். பாண்டிச்சேரியில் வளர்ந்தவர் கம்போடியாவில், ஒரு புதிய நாட்டில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கின்றார் என்ற ஆச்சரியத்திற்கும் மேலாக வியக்க வைத்தது இவர் மூன்று முறை உலகம் சுற்றி வந்தவர் என்ற செய்தி.

இவரோடு நேரில் பழகிய அடுத்தடுத்த நாட்களில் இவரது பரந்த உலகப் பயண அனுபவமும், பல தரப்பட்ட மக்களைச் சந்தித்த அனுபவமும் இவரிடம் அன்பையும் நேசத்தையும் அதிகரித்திருக்கின்றது என நினைத்துக் கொண்டேன். நாம் இருக்கும் தெருவிலிருந்து அடுத்த தெருவிற்குச் செல்வதற்கே இன்னமும் சில பெண்கள் நடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். பெண்களால் இது முடியுமா? பெண் இதைச் செய்யலாமா என கேள்வி எழுப்புவோரும் இன்றும் உள்ளனர். இவர்களுக்கு மத்தியில் தாமரை உலகம் சுற்றிய தாமரையாகத் திகழ்கின்றார் என்பதும் கம்போடியாவில் கட்டுமரம், தாமரை என்ற பெயர்களில் இரண்டு உணவங்களின் உரிமையாளர்களில் ஒருவர் என்ற செய்தியும் ஏனைய பெண்களுக்கும் ஒரு உந்துதலாக அமையும் அல்லவா?

தொடரும்..
சுபா










No comments:

Post a Comment