Saturday, January 5, 2013

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 22


அப்போது காலை ஏறக்குறை 11 மணியிருக்கலாம்  எங்களை நோக்கி வந்த காவல்துறை அதிகாரிகளிடம் காரணம் விசாரித்தோம். அன்றைக்கு முதல் நாள் தான் திருமலை சுற்று வட்டாரத்தில் வாழும் குடும்பத்தினர்கள் சேர்ந்து திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயச் சுற்றுச் சூழலில் உள்ள பாறை ஓவியங்களையும் மரபுச் சின்னங்களையும் அரசாங்கத்தின் பாதுகாப்பிற்குறிய இடமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என மனு கொடுத்திருப்பதாகவும் அதற்காகக் கூட்டமாக அங்கு வந்து தங்கள் கோரிக்கையை வைக்கப் போவதாகவும் அதனை கண்காணிக்க அங்கே வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்கள் இரண்டு காவல் அதிகாரிகளும்.

அவர்கள் சொன்னதை நிரூபிப்பது போன்று ஒரு வெள்ளை நிற ஜீப் வண்டியும் 2 அம்பாஸிடர் கார்களும் வந்து சேர்ந்தன. ஏறக்குறைய 30 பல தரப்பட்ட வயதுடைய ஆண்கள் வந்திறங்கினர்.

நாங்கள் அந்தக் காவல் துறை அதிகாரிகளிடம் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி விளக்கி நாங்கள் அங்கு வந்திருப்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டோம். அவர்கள் இருவருக்குமே ஆச்சரியம். எங்களோடு சேர்ந்து நாங்கள் புகைப்படமும் வீடியோவும் எடுத்த இடங்களுக்கெல்லாம் வந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குள் கீழேயிருந்து வந்தவர்களில் சில இளைஞர்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.




நாங்கள் பொதுமக்கள் சேதப்படுத்தி வைத்திருக்கும் சமணப் படுகைகளையும் பாறை சித்திரங்களையும் காவல் அதிகாரிகளிடம் காட்டி இவையெல்லாம பாதுகாக்கபப்ட வேண்டிய மரபுச் சின்னங்கள் என அவர்களுக்கு விளக்கினோம். அவர்களும் நாங்கள் சொல்வதை ஆமோதித்தனர்.



நான் முதல் நாள் டாக்டர் வள்ளியிடம் கற்றிருந்த சமணப்படுகைகள் பற்றிய விளக்கத்தை காவல் அதிகாரிக்கும் சொல்லி விளக்கினேன். இப்படி தகவல்கள் ஒருவர் வழியாக மற்றவருக்கு என்று செல்வதன் வழி பல விஷயங்களைப் பொதுமக்களிடம் சேர்க்க முடியும் என்பதை அன்று நேரில் அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம்.

பாறைக்கு மேலே பதிவுகளை முடித்துக் கொண்டு கீழே கோயிலுக்கு வந்தோம். கீழே வந்திருந்த பொதுமக்களுக்குக் காளைராசன் எங்களையும் நாங்கள் அங்கு வந்ததற்கான காரணத்தையும் எடுத்து விளக்கினார். அவர்களின் முகத்தில் மலர்ச்சி. எங்களுக்கும்!

அவர்களில் ஒருவரைத் தவிர ஏனையோர் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த மற்றொருவர் அந்த முன் பகுதி கோயிலைக் கட்டிய கருப்பண்ணசாமியின் பரம்பரையைச் சேர்ந்தவர், கள்ளர் சமூகத்தவர்.  சிலர் பார்ப்பதற்கே எனக்கு போர் வீரர்கள் போலக் காட்சியளித்தனர். அவர்களின் தலைவராக வந்திருந்தவர் ஒரு இளைஞர். அவர் அந்த இடத்தில் ஒரு அரசியல் பிரமுகரும் கூட.

அவர்கள் காவல்துறையினரிடம் பேசி தங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்தனர். பின்னர் நாங்கள் மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே செல்ல ஆயத்தமானோம். நால்வராக இருந்த  நாங்கள் 40 பேருக்கு மேல் என்றானோம். எங்களுடன் அந்த 2 காவல் அதிகாரிகளும் குடைவரை கோயிலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் இணைந்து கொண்டனர்.

தொடரும்...

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment