Sunday, January 6, 2013

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 23


கோவிலுக்குள் நுழைந்தோம்.

முதலில் நம்மை எதிர்கொள்வது மாவீரர் கருவபாண்டியன் சுவாமி  சிலைதான். இந்தக் கோயில் பாண்டியர் காலத்தது என்றாலும் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோயிலின் முன்பகுதியைக் கட்டி அதனைச் சீரமைத்தவர் தான் இந்த மாவீரர் கருவபாண்டியன். இவர் மரவர் குலத்தைச் சார்ந்தவர்.




அவர் பயன்படுத்திய  ஏறக்குறைய 200 வருடம் பழமை கொண்ட அந்த வாளை இணைத்தே சிலையோடு வைத்திருக்கின்றனர். அந்த வாளை என் கையில் கொடுத்து அதனைத் தூக்கிப் பார்க்கச் சொல்லி சந்தோஷித்தார் ஒரு முதியவர். அவர் இந்த மாவீரர் கருவபாண்டியன் சுவாமி பரம்பரையைச் சேர்ந்தவர். முதியவர். வயது 80க்கும் மேல் ஆனால் சுறுசுறுப்பான நடை. வேகமான பேச்சு, தெளிவான குரல். வயதை மறைத்து நின்றது அவரது சுறுசுறுப்பு.




மாவீரர் கருவபாண்டியன் சுவாமி சிலையைத் தாண்டி மேலே இடது புறமாக நடந்தால் குடைவரைக் கோயில் பகுதிக்குச் செல்லலாம். உள்ளே பிள்ளையார், முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் புடைப்புச் சிற்பங்களைக் கண்டு ரசித்தோம். அச்சிலைகளின் சிறப்புக்களையும் தன்மைகளையும் டாக்டர் வள்ளி அவர்கள் விளக்குவதை விழியப் பதிவாக புத்தாண்டு வெளியீடாக வெளியிட்டிருந்தேன்.  அந்த விழியப்பதிவுகளைப் பற்றிய செய்திகளை  இங்கே காணலாம். http://tamilheritagefoundation.blogspot.de/2013/01/2013.html.  குறிப்பாக இந்தக் குடைவரை கோயில் பற்றிய விழியப் பதிவினை http://video-thf.blogspot.co.at/2012/12/blog-post_30.html என்ற வலைப்பூவில் காணலாம்.



அற்புதமான குடைவரைக் கோயில். வெளியேயிருந்து பார்க்கும் போது இப்படி ஒரு சிற்பக் களஞ்சியம் உள்ளே இருப்பதைப் பற்றி யாரும் அறிந்திருக்க முடியாது. எத்தனை வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தகைய அற்புதப் படைப்புக்கள் நாம் அறியாமல் இருந்திருக்கின்றோம் என்று நினைத்து அனைவருமே வியந்தோம்.




சிற்பங்களின் விளக்கங்களைக் கேட்டுக் கொண்டே குடைவரைக் கோயிலின்  குகைப்பகுதியிலிருந்து வெளிவந்தோம். இரண்டு பக்க சுவர் பகுதி முழுவதும் கல்வெட்டுக்கள். இவ்வளவு நீளமாக சிறப்பாக நேர்த்தியாக பாறை சுவற்றில் செதுக்கிய இந்த எழுத்துக்கள் தமிழில் உள்ளன. இக்கல்வெட்டுகள் அனைத்தும் தமிழக தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளன என்ற விபரத்தையும் எங்களுக்குத் தொடர்ந்து விளக்கம் அளித்து வந்த டாக்டர்.வள்ளி தெரிவித்தார்.



கோயிலில் இருந்த பழமை வாய்ந்த மகிஷாசுரமர்த்தினி வடிவத்தை பார்த்தேன். நேர்த்தியான பெரிய அளவிலான சிற்பம் அது.

அடுத்து கோயிலில் அமர்ந்து பூக்கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கல்லைப் பார்வையிட்டோம். இந்தப் பாறையானது அமர்ந்து பூத்தொடுப்பதற்காக அமைக்கப்பட்டது என்று செதுக்கி வைத்திருக்கின்றார்கள். எல்லாம் 9ம் நூற்றாண்டு தமிழ் எழுத்துக்கள் என்று நினைக்கும் போது வியப்பு மேலிட்டது. கோயில் முழுதும் பார்த்து முடித்து வெளியே வரும் போது அங்கு வந்திருந்த யாதவர் சமூகத்து மக்களும் அவர்கள் தலைவரும் நாங்கள் ஏதேனும் சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டனர். நான் எனது தமிழக பயணத்தில் மிக விரும்புவது இளனீர். ஆக இளனீர் கிடைத்தால் சந்தோஷமாக இருக்கும் என்று கூறிவிட்டேன். அவர்கள் அங்கே அருகில் எங்கும் இளனீர் கிடைக்காது. சற்று வெளியில் சென்று தான் வாங்கி வரவேண்டும் என்று கூற எனக்கு மிக சங்கடமாகி விட்டது. பரவாயில்லை. வேறு ஏதும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என நான் எவ்வளவு கூறியும் அவர்கள் கேட்பதாக இல்லை. நீங்களெல்லாம் பேசிக் கொண்டிருங்கள். கொஞ்ச நேரத்தில் இளனீர் வந்துவிடும் என்று கூறிவிட்டு ஜீப்பை எடுத்துக் கொண்டு பறந்து விட்டனர்.

அந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது யாதவர் குலத்தைப் பற்றியும், அவர்களுக்குக் கண்ணனே குல தெய்வம் என்றும் சொல்லி ஒரு பெரியவர் கண்ணன் நாட்டார் பாடல் ஒன்றைப் பாட ஆரம்பித்தார். கணீர் என்ற குரல். மனப்பாடமாக முழு பாடலும் நினைவில் அவருக்கு. இதன் பதிவினை இங்கே காணலாம். http://voiceofthf.blogspot.de/2013/01/blog-post.html  பாடலைக் கேட்டு பதிவு செய்து கொண்டிருக்கும் போதே இளனீர் வந்துவிட்டது. அவர்கள் அன்பைக் கண்டு அகமகிழ்ந்தேன். ஒன்றுக்கு இரண்டாக இளனீர் குடித்தும் சாப்பிட்டும் மகிழ்ந்தேன்.

தொடரும்..
சுபா

No comments:

Post a Comment