Sunday, January 27, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 5


கோயிலும் இங்குண்டே..!

ஆஸ்திரியாவைப் பற்றி எழுதி வரும் போது, இன்றைய நாளில் ஆஸ்திரியாவில் பிறந்த ஒரு உலகப்புகழ் மிக்க ஒரு கலைஞரைப் பற்றி குறிப்பிடுவது மிகத் தகும் இல்லையா? மோஸார்ட் எனப் பரவலாக அழைக்கப்படும் Wolfgang Amadeus Mozart பிறந்த தினம் இன்று. இன்றைய தேதியில் 1756ம் ஆண்டு பிறந்தவர். இவரது புகழை பலரும் அறிவோம். ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் மானிலத்தில் பிறந்தவர். வாய்ப்பு அமைந்தால் ஒரு தனிப்பதிவிவ்ல் இவரைப் பற்றி குறிப்பிடுகின்றேன்.

சரி.. இன்றைக்கு கோயில்களைப் பற்றி குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.

கோயிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற நன்மொழி நம் வழக்கில் உள்ளது. இது தமிழ் தேசத்திற்கு மட்டும்  பொருந்திய உண்மையா என்றால் இல்லை என்பதாகவே அமைகின்றது எனது பயண அனுபவங்கள். உலகில் தோன்றியுள்ள அனைத்து சமூகத்திலும் இறை நம்பிக்கை எனும் ஒன்று அடிப்படையில் மனதில் அமைந்திருக்கின்ற ஒரு பண்பாக இருக்கின்றது. எங்கெல்லாம் மனித சமூகம் இருக்கின்றதோ அங்கெல்லாம் அவரவர் மத வழிபாட்டிற்குத் தேவைப்படும் கோயில்களுக்குக் குறைச்சல் இல்லை என்பதை எனது பல விரிவான அயல் நாட்டுப் பயணங்களில் பார்த்து குறித்து வைத்துள்ளேன்.

கிராமத்து சாலையோரத்துக் கோயில்

அந்த வகையில் ஜெர்மனியின் பவேரிய மானிலமாகட்டும், அதன் தொடர்ச்சியாக அமைந்த நிலப்பரப்பில் அடங்கியுள்ள ஆஸ்திரியாவாகட்டும், எல்லா பெரிய நகரங்களிலும் சரி, சிற்றூர்களிலும் சரி தேவாலயங்களைக் காணலாம்.

எங்கள் தங்கும் விடுதி Hotel Talhof  இருந்த இடம் Wangle என்ற கிராமம். நாங்கள் தங்கியிருந்த கிராமத்தின் மிகப் பெரிய நகர் என்றால் அது ரோய்ட்ட நகர் தான். இதன்  அருகாமையில் அமைந்த சிறு நகரங்களாக Breitenwang, Ehenbichl, Pflach, Hoefen, Weissenbach ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.  இந்த சிறு நகரங்களில் பல சிறு கிராமங்கள் அடங்கியிருக்கின்றன.

ரோய்ட்ட நகர் Wangle கிராமத்திலிருந்து 5 கிமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. இங்கு ஒரு நாள் நடைப்பயணம் சென்று வந்த போது வேங்க்லெ கிராமம் அதனையடுத்து வரும் லேஹெஷவ் கிராமங்களை நன்கு பார்த்து ரசிக்க முடிந்தது. ரோய்ட்ட நகரில் 13ம் நூற்றாண்டு தேவாலயம் ஒன்றும் மேலும் சில பழமை வாய்ந்த தேவாலயங்களும் இருக்கின்றன. அவை இன்றும் புணரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு நல்ல நிலையில் அமைந்திருக்கின்றன.


ரோய்ட்ட நகரில் அமைந்துள்ள தேவாலயம்

லேஹெஷவ் கிராமத்திலும் ஒரு பெரிய  தேவாலயம் இருக்கின்றது. 5 கிமீட்டர் தூரத்திற்குள்ளேயே ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தேவாலயங்கள் எனப் பார்க்கும் போது தேவாலயங்கள் இங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையில் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை உணர முடிகின்றது.

வாங்க்லே கிராமத்து எல்லைச்சாமி கோயில்

இந்தப் பெரிய தேவலாயங்களை விட என்னை வெகுவாகக் கவர்ந்தவை சாலை ஓரங்களில் அமைந்திருக்கின்ற சிறு கோயில்கள். தமிழகத்தில் காணக்கூடிய எல்லைச்சாமி கோயில், கிராம தேவதைகள் கோயில் போல இவை இருக்கின்றன. ஒரு கிராமம் ஆரம்பிக்கின்ற எல்லையின் ஆரம்பத்தில் பொதுவாக இவ்வகை சிறு எல்லைச்சாமி தேவாலயங்கள் இருக்கின்றன. சில இடங்களில் கிராமங்களின் மத்தியிலும் கூட இவை அமைந்திருக்கின்றன. ஒரு கிராமத்திற்கு ஒரு சிறு கோயில்தான் என்ற கணக்கு இல்லாத வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கூட சில தென்படுகின்றன.


மற்றொரு சாலையோரத்து கோயில் முகப்பு

பொதுவாக இவ்வகை எல்லைச்சாமி கிராம தெய்வ கோயில்களில் வழிபாட்டிற்கு அமைந்திருப்பது சிலுவையில் சார்த்தப்பட்ட ஏசுவின் உருவமாகவோ அல்லது மேரி மாதா கையில் குழந்தையைக் வைத்திருப்பது போன்ற சிலையாகவோ அமைந்திருக்கின்றது. அதிலும் பார்க்கையில் ஏசுவின் சிலைகள் தான்  மிக அதிகமாக பல சிற்றூர்களில் காணக்கூடியதாக அமைந்திருக்கின்றன. தெய்வ நம்பிக்கை எனும் ஒரு விஷயம் ஆசிய  நாடுகள் மட்டுமன்றி ஐரோப்பாவிலும் கூட கிராம மக்களின் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத ஒரு அங்கத்தை வகிக்கின்றது என்பது உண்மை!

தொடரும்....

சுபா

No comments:

Post a Comment