Thursday, January 10, 2013

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 25


சிவகங்கை ஸமஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ அரண்மை கட்டிடம் தான் அது.

இந்த சமஸ்தானத்தின் புகழ்மிக்க அரசியார் வேலு நாச்சியார் பெயரை கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் எனது இந்தப் பயணத்தில் சிவகங்கை நகருக்கு வருவோம் என்றோ, இந்த அரண்மணையைப் பார்ப்போம் என்றோ சற்றும் திட்டமிடவில்லை. ஏதேச்சையாக இங்கு வரும் வாய்ப்பு அமைந்து இந்த அரண்மணையைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்ததை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.




வாசல் புறத்தில் நின்று புதிதாக வர்ணம் பூசப்பட்டு அந்த சாலையிலேயே எழிலுடன் காட்சியளித்துக் கொண்டிருக்கும் அந்த மண்டபத்தைப் பார்த்தோம்.




வாசலிலேயே உயரமான ஒரு அமைப்பில் வேலுநாச்சியாரின் உருவச் சிலையை வடித்திருக்கின்றார்கள்.  இந்த உருவச் சிலை தற்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களால் 1992ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது என்ற செய்தியைத் தாங்கிய விபரங்களையும் பார்த்து பதிவு செய்து கொண்டேன். அரண்மணைக்குள் செல்ல முடியுமோ முடியாதோ என சந்தேகம் எழாமல் இல்லை. எதற்கும் முதலில் சாப்பிட்டு விட்டு வரலாமே என அரண்மணையைச் சார்ந்தார் போலமைந்திருந்த ஒரு உணவகத்திற்குள் நுழைந்தோம்.

மதியம் 2 மணியைக் கடந்திருந்தாலும் உணவுக் கடையில் கூட்டமிருந்தது. நால்வரும் திருப்தியாக அங்கே உணவருந்தி விட்டு வெளியே வந்தோம். உடனே திரும்பிச் செல்ல மனம் வரவில்லை.

மீண்டும் அரண்மணைக்குச் சென்று திறந்திருந்த ஒரு பாதையைப் பார்த்து அதன் வழியாக உள்ளே சென்றோம். காவலுக்கு அப்போது அங்கு யாரும் இல்லை.



வாசல் புற மதில் சுவரைக் கடந்ததும் விரிவான திறந்த வெளி. வலது புறத்தில் அரண்மணையின் ஒரு பகுதி அமைந்திருக்கின்றது. நேராகப் பார்க்க  அங்கேயும் அரண்மணையின் ஒரு பகுதி அமைந்திருப்பதைக் கண்டோம். அதனை நோக்கி நடந்தோம். அப்போது வாசலுக்கு ஒருவர் வருவதைப் பார்த்தோம். அவரும் எங்களைப் பார்த்தார்.

நாங்கள் நால்வருமாக அவரை நோக்கிச் சென்றோம். அவர் எங்களைப் பற்றி விசாரிக்க நாங்கள் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அரண்மணையில் அரச குடும்பத்தினர் யாரும் இருக்கின்றனரா என்று ஆர்வத்துடன் கேட்டோம். அவர் அரச குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் அன்று வீட்டில் இருப்பதாகத் தெரிவித்தார்.  எங்களுக்கு அவரைப் பார்த்து வேலு நாச்சியார் இருந்த அந்த வீட்டையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிக, அவரிடம் உள்ளே சென்று பார்க்க அனுமதி கேட்டோம். அவர் முதலில் வீட்டில் அச்சமயம் இருந்த அரச குடும்பத்தைச் சார்ந்தவரிடம் அனுமதி கேட்டு விட்டு வருவதாகக் கூறிச் சென்றார்.

சில நிமிடங்களில் அவருடன் மேலும் ஒருவரும் இணைந்து வந்தார். புதிதாக வந்தவர் பார்க்கவே சற்று ராஜ தோற்றத்துடன் இருந்தார். யாராக இருக்கும்..? உள்ளே செல்ல அனுமதிப்பார்களா..?  என்ற சந்தேகம் மனதில் எழ நின்று கொண்டிருந்தோம்.

No comments:

Post a Comment