Saturday, January 12, 2013

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 28


மாலை காரைக்குடிக்கு வந்து சேரும் போது இருட்டி விட்டது. எனக்கு அன்று இரவே சென்னைக்கு ரயில் பயணமாதலால் விரைந்து தயாராக வேண்டிய நிலை. அதற்குள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். ராஜ்குமார், டாக்டர். சந்திரசேகரன் ஆகியோர் செட்டி நாட்டு பிரத்தியேக உணவுகளில் சில வகைகளை எங்கள் மாலை உணவுக்காக வாங்கி வந்திருந்தனர். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

இடியாப்பம், குழிப்பணியாரம், அவல், வடை, மோதகம் என ஏழெட்டு வகை உணவுகள். அவை ஒவ்வொன்றையும் படம் பிடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த அவசரத்தில் எனக்கு அப்போது பதிவு செய்ய வேண்டுமே என்ற எண்ணம் வரவில்லை. மாறாக ஒவ்வொன்றையும் நன்றாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னோடு அங்கிருந்த டாக்டர். வள்ளி, பாலு, காளைராசன், நா.கண்ணன் அனைவருமே இந்த விருந்தினை மிக நன்கு ருசித்து ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தனர்.

இந்த உணவுகளெல்லாம் காரைக்குடி நகருக்கென்றே பிரத்தியேகமானவை என்றும் இவை சிறப்பாக ஒரு பிரத்தியேகக் கடையில் மாத்திரமே கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொண்டேன். நாங்கள் அவற்றை சுவைக்க வேண்டும் என்பதற்காகவே முன் கூட்டியே சொல்லி வைத்து, காத்திருந்து எங்களுக்காக அவற்றை வாங்கி வந்து எங்களுக்கு அன்புடன் பரிமாறிய டாக்டர்.ராஜ்குமார் டாக்டர்.சந்திரசேகரன் ஆகியோரின் அன்பை  இப்போதும் நினைத்துக் கொள்கின்றேன்.

உணவு முடித்து காரைக்குடி ரயில் நிலையத்திற்கு விரைந்தோம். என்னை வழியனுப்பி வைக்க அனைவருமே வந்திருந்தனர். மைக்கலும் ரயில் நிலையத்திற்கு நேராக வந்து இணைந்து கொண்டார். என்னை ரயிலில் ஏற்றி விட்டு ரயில் புறப்பட்ட பின்னரே அனைவரும் திரும்பினர்.

மூன்று நாட்கள் சந்தித்த புதிய முகங்கள், அவர்கள் நண்பர்களாகிப் போன விதம், பார்த்த விஷயங்கள், தெரிந்து கொண்ட புதிய தகவல்கள், இனிமையாகக் கழிந்த பொழுதுகள் அனைத்தையுமே ரயில் பயணத்தில் யோசித்துக் கொண்டிருந்தேன். சில விஷயங்களை எனது கணினியில் குறித்துக் கொண்டேன். மூன்று நாட்களும் பல இடங்களுக்கு அலைச்சல் என அமைந்த போதிலும் காரைக்குடி நண்பர்களின் அன்பும் ஆதரவும் என் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டது.

எனது பயணங்களில் நான் சந்திக்கின்ற மனிதர்களைப் பற்றியும்,  என் அனுபவங்களைப் பற்றியும், நிகழ்வுகளைப் பற்றியும், நான் காண்கின்ற எனக்குப் புதியனவாகப் படுகின்ற விஷயங்களைப் பற்றியும் பதிவாக்கி வைப்பதை சில வருடங்களாக வழக்கமாக  கொண்டிருக்கின்றேன். எனது எல்லா பயண அனுபவங்களையும் இவ்வகையில் பதிவு செய்வது இயலாத காரியம் என்றாலும் முடிந்தவரை முயல்கின்றேன்.

இந்தப் பயணக்கட்டுரைத் தொடர் இப்பகுதியுடன் நிறைவு பெறுகின்றது.

மீண்டும் ஒரு புதிய பயணத் தொடருடன் வருவேன். :-))



என்னுடன் இணைந்து பயணித்த மின்தமிழ் வாசகர்கள் அனைவருக்கும், கருத்து பகிர்ந்து மகிழ்வித்தவர்களுக்கும் எனது நன்றி.

அன்புடன்
சுபா

1 comment:

விச்சு said...

பயணத்தினை மிகச்சிறப்பாக முடித்துள்ளீர்கள். கட்டுரை ரசிக்கும்படி உள்ளது.

Post a Comment