Thursday, January 10, 2013

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 26


புதிதாக வந்தவர் எங்களைப் பற்றி விசாரிக்க, நாங்களும் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றியும் நாங்கள் எங்கிருந்து வருகின்றோம், எப்படி சிவகங்கை வந்து சேர்ந்தோம் என்றும் கூறி எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர் தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டார். அதாவது சிவகங்கை சமஸ்தானத்தின் தற்போதைய அரசபதவியில் இருக்கும் மகாராணியாரின் சகோதரரின் மகன் இவர். பல ஆண்டுகள் பெங்களூரில் இருந்து விட்டு தற்சமயம் தான் இங்கே மாற்றலாகி வந்திருப்பதாகத் தெரிவித்தார்.தன்னைப் பற்றியும் அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னர் எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். எங்கள் நால்வருக்கும் சொல்ல முடியாத மகிழ்ச்சி. இது எதிர்பார்க்காமல் கிடைத்த அழைப்பு அல்லவா?



அரண்மணை வெளித்தோற்றத்தில் தெரிவது போல உள்ளே சீரமைப்பு செய்யப்படவில்லை. பழைய கட்டிடம் அப்படியே மாறாமல் இருக்கின்றது. வலது புறத்தில் தற்போதையை மகாராணியார் வசிக்கின்றார். அங்கு அப்பகுதி பூட்டப்பட்டிருந்தது. நாங்கள் நேராக உள்ளே சென்றோம். பெரிய வீடு. பல அறைகள்.




வீட்டின் பல மூலைகளில் வேலு நாச்சியாரின் சித்திரங்கள் காலண்டர் வடிவிலும் படங்களாகவும் சுவற்றில் மாற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. பூஜை செய்யும் பகுதியில் மூதாதையர் படங்களையும் இணைத்து வைத்திருக்கின்றனர். அரச குடும்பத்தினரின் படங்கள் ஆங்காங்கே சுவற்றில் இருந்தன. அவை கடந்த 100 அல்லது 150 ஆண்டுகளுக்குள் எடுக்கப்பட்ட படங்களாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.



வீட்டைச் சுற்றிப் பார்த்து சில புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம். நாங்கள் திருப்திகரமாக சுற்றிப் பார்த்து விட்டோம் எனத் தெரிந்தததும் அவர் எங்களை வாசல் பகுதிக்கு அழைத்து வந்தார். அங்கே சிறு தோட்டம் பசுமையாக மலர்கள் பூத்துக் குலுங்க காட்சியளித்துக் கொண்டிருந்தது.



நாங்கள் அங்கே அமர்ந்து அவர் வரவழைத்து எங்களுக்குக் கொடுத்தத் தேனீரைப் பருகிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தோம். நான் பிரத்தியேக பேட்டியாக எதனையும் செய்யவில்லை. திடீரென்று சென்ற காரணத்தோடு நானும் சற்றே அலுத்துப் போயிருந்தேன். ஆக அமைதியாக அந்தச் சூழலில் சிவகங்கை சமஸ்தானத்தின் பூந்தோட்டப் பகுதியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தது களைப்பைப் போக்குவதாக இருந்தது. சமஸ்தானத்தைப் பற்றி நன்கு அறிந்த காளைராசன் அவ்வப்போது சில கேள்விகள் கேட்க அதற்கு அந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும் பதிலளித்தார். தற்சமயம் கூட சிவகங்கை சமஸ்தானத்தின் மேற்பார்வையின் கீழ் சில கோயில்கள் இருக்கும் விபரம் இதன் வழி எனக்கும் தெரியவந்தது.


இதுவே முன்னூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்னரென்றால்  இங்கே யானைகளும் குதிரைகளும் பல்லக்குகளும், வேலையாட்களும், அரச குடும்பத்தினரும் பொது மக்கள் கூட்டமும் என்று கூட்டம் கூட்டமாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் இருந்த அச்சமயத்தில் அங்கிருந்த அமைதி கால ஓட்டத்தில் நடந்திருக்கும் மாற்றங்களை வெளிப்படுத்தி தற்கால  நிலையை உணர வைப்பதாக அமைந்திருந்தது.

சற்று நேரத்திற்குப் பின்னர் அவரிடம் நன்றி தெரிவித்து விடைபெற்றுக் கொண்டோம். அங்கிருந்து எங்கள் வாகனம்  நாட்டரசன் கோட்டைக்குப் புறப்பட்டது.

No comments:

Post a Comment