(இறுதிப் பகுதி)
கடற்கரை காற்று யாருக்குத்தான் பிடிக்காது?
பயணத்தின் முதல் நாள் நாங்கள் ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்தின் டோவர் நகருக்கு வந்து பின்னர் அங்கிருந்து லண்டனுக்கு ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் பயணம் செய்து சென்றடைந்தோம். நேற்று தமிழ் இலக்கியவாதிகளுடன் சந்திப்பை முடித்துக் கொண்டு நாங்கள் லண்டனில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்தின் தென்கிழக்கு நகரங்களில் ஒன்றான ஹையத் நகரத்தை சென்றடைந்தோம்.
இந்த ஹையத் ஒரு கடற்கரை நகரம் என்பதால் கடற்கரையை பார்த்து ரசிக்க முடியும் என்று எண்ணம் இருந்தது. நாங்கள் வந்து சேர்ந்த போது சூரிய வெளிச்சம் நன்கு தெளிவாக இருந்து. சிறிய நகர் தான் இது. ஆயினும் ஏராளமான வரலாற்றுச் செய்திகள்... குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சின்னங்கள்.
1200 மண்டை ஓடுகள் வரிசையாக அடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஒரு அருங்காட்சியகமும் இந்த நகரில் இருக்கின்றது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதா? இதனைப் பற்றி பின்னர் விரைவாக எழுதுகிறேன்.
கடற்கரை தூய்மையாக இருந்தது. அழகிய கூழாங்கற்கள் கடற்கரை முழுதும் நிறைந்திருந்தன. இங்கு மணல் இல்லை. அமைதியான அலைகள்.
சில்லென்ற குளிர் காற்று. நேரம் செல்ல செல்ல குளிரின் தன்மை அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் இந்த குளிரான காற்றின் சுகமான அனுபவம் இங்கிருந்து தங்கும் விடுதிக்கு செல்வதற்குத் தடை விதித்து கொண்டே இருந்தது.
தூரத்தில் பார்த்தால் டோவர் நகருக்கு வருகின்ற கப்பல்களின் வெளிச்சம் பளிச்சு பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்தது. மற்றபடி கடலில் பெரும் கப்பல்கள் எவற்றையும் காணவில்லை.
இந்த ஹையத் நகரம் கிபி நான்காம் நூற்றாண்டு காலத்தில் ரோமானியர்களால் ஒரு துறைமுகமாக நிர்மாணிக்கப்பட்ட பழம் நகரம். அதற்கு முன்னர் மீனவர்கள் இங்கு வசித்திருக்கின்றார்கள். கிபி 11ம் நூற்றாண்டு தொடங்கி மிக முக்கியமான ஒரு துறைமுகமாக இது வளர்ச்சி கண்டது. ஐரோப்பாவிலிருந்து இங்கு கப்பல்களில் மக்கள் வந்து செல்வது வழக்கமாகியது.
இன்று சுற்றுப்பயணிகளைக் கவரும் ஒரு நகரமாக இது அமைந்திருந்தாலும் கோடை காலத்தில் தான் அதிகமான சுற்றுப்பயணிகள் இங்கு வருகின்றார்கள். வசந்த காலம் இன்னும் குளிராக இருப்பதால் சுற்றுப்பயணிகளை அதிகம் காண முடியவில்லை.
கடற்கரை முழுதும் எங்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது போல நாங்கள் மட்டும்தான் கடற்கரையில் நின்று அலைகளை ரசித்துக் கொண்டிருந்தோம்.
இன்று காலை ஹையத் நகரில் இருந்து புறப்பட்டு டோவர் வந்து கப்பல் எடுத்து ஐரோப்பாவின் டன்கிர்க் நகரம் வருவதற்காக டிக்கெட் புக்கிங் செய்திருந்தோம். ஆக புறப்படுவதற்கு முன் மீண்டும் ஒருமுறை கடற்கரையில் நீண்ட தூரம் நடக்கச் சென்று சுகமான காற்றை சுவாசித்துக் கொண்டே இந்த நகரை பற்றி அறிந்து கொண்ட செய்திகளைப் பரிமாறிக் கொண்டோம்.
இங்கிலாந்தின் கடற்கரை நகரங்களை ஒவ்வொன்றாக பார்த்து வருவதும் ஒரு நல்ல அனுபவமாக நிச்சயம் இருக்கும். மீண்டும் ஒரு முறை இத்தகைய ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அடுத்த முறை வரும்போது இப்போது சென்றிராத மேலும் பல கடற்கரை நகரங்களுக்குச் சென்று அவற்றைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.
ஜெர்மனியில் வீட்டிலிருந்து ஐரோப்பாவின் பிரான்ஸ், லக்சம்பர், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் சாலைகளில் பயணித்து, இங்கிலாந்து தீவை அடைந்து, லண்டன் வரை பயணித்து, பின்னர் மீண்டும் திரும்பி வருவதற்கு ஏறக்குறைய 3600 கிலோ மீட்டர் தூரம் வாகனத்தில் பயணம் செய்திருக்கின்றோம்.
இங்கிலாந்து ஒரு வரலாற்றுப் புதையல். இந்த தீவின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ஒரு வரலாற்றுச் செய்தி நமக்காகக் காத்திருக்கின்றது!
No comments:
Post a Comment