லண்டன் நகரின் ஈஸ்ட் ஹேம் பகுதி தமிழ் மக்கள் மிக அதிகமாக வசிக்கும் ஒரு பகுதி எனலாம். இங்கு ஏராளமான தமிழர்கள் நடத்தும் கடைகள் இயங்கி வருகின்றன. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கோயில்களும் அமைந்திருக்கின்றன. தமிழ்ப் பெயர் பலகைகளுடன் கடைகளும் சாலைகளில் தமிழ் மக்களும் நடந்து செல்வது தமிழ்நாட்டில் இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும்.
இலங்கையின் இலக்கியவாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் பலர் லண்டன் நகரில் வாழ்கின்றார்கள். அவ்வகையில் குறிப்பிடத்தக்க பல ஆக்கங்களைத் தமிழ் எழுத்துலகுக்கு வழங்கியவர் பேராசிரியர் நித்தியானந்தன் அவர்கள். மலையக சூழலை விவரிக்கும் அவரது கூலித்தமிழ் தமிழ் இலக்கிய உலகம் பாராட்டும் ஓர் அரிய படைப்பு. மலையகத் தமிழர் வாழ்வியல் மட்டுமல்லாது வேறு பல கோணங்களிலும் தனது இலக்கிய படைப்பை தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கி இருக்கின்றார் இவர்.
பத்மநாப ஐயர் தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த ஒருவர். நூலகம் அமைப்பின் புறவலர். இந்த அமைப்பின் வழி ஆயிரக்கணக்கான தமிழ் நூல்கள் மின்னாக்கம் செய்யப்பட்டு உலகளாவிய மக்கள் இணையம் வழி இலங்கை தமிழ் ஆய்வுகள் தொடர்பான நூல்களை வாசிக்க வழி ஏற்படுத்தித் தந்துள்ளது.
திரு பௌசர் அவர்கள் ஐரோப்பாவில் தமிழ் நூல்களை எடுத்துச் சென்று பல்வேறு பகுதிகளில், குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற பகுதிகளில் புத்தகக் கண்காட்சிகளை நடத்தி நூல்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வருபவர். இது எளிய ஒரு பணி அல்ல. பல சிரமங்களுக்கிடையில் சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற இடங்களில் புத்தகக் கண்காட்சிகளைச் செய்து நூல் விற்பனையைச் செய்வதன் வழி தமிழ் நூல்கள் புலம் பெயர்ந்து வாழ்கின்ற மக்களிடையே செல்வதற்கு வழி ஏற்படுத்தி தருகின்றார். இவரது முயற்சியில் லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் ஒரு சிறிய புத்தகக் கடை உள்ளது. மிகுந்த சிரமங்களுக்கிடையில் இந்த புத்தகக் கடையை நடத்தி வருகின்றார். தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் ஒன்று கூடுவதற்கும் இந்த இடம் தற்சமயம் பயன்படுகிறது.
இன்று இணையர் கௌதம சன்னாவின் ஓர் உரை நிகழ்ச்சி இந்த புத்தகக் கடையில் ஏற்பாடாகி இருந்தது. பஞ்சு மிட்டாய் பிரபு, தோழர் பாஸ்கர், ஆகிய இருவரும் எங்களோடு இணைந்து கொள்ள, நாங்கள் இந்தப் பகுதியில் உள்ள வசந்த பவன் உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு அங்கிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்றோம்.
அங்கே எங்களுக்காகத் தோழர்கள் பலரும் வந்து காத்திருந்தார்கள். தோழர் நவஜோதி, மீனாள் நித்தியானந்தன், எலிசபெத், ஓவியர் ராஜா, பத்மநாப ஐயர், பேராசிரியர் நித்தியானந்தன் உட்பட மேலும் பல புதிய நண்பர்களையும் அங்கு காண முடிந்தது.
அம்பேத்கரின் தேவை என்ற பொருண்மையில் அமைந்த உரையில் அம்பேத்கர் பற்றிய பல்வேறு வரலாற்றுச் செய்திகளைத் தனது உரையில் கௌதம சன்னா வெளிப்படுத்தினார். ஒரு மணி நேர உரைக்குப் பின்னர் வந்திருந்த தோழர்களுடன் கலந்துரையாடல் அமைந்திருந்தது. ஏறக்குறைய மணி மதியம் 1 ஆன பின்னரும் கூட தோழர்கள் ஆர்வத்துடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
அம்பேத்கர் பற்றிய, அவரது செயல்பாடுகள் குறித்த பல்வேறு தகவல்களை ஆர்வத்துடன் வந்திருந்த அனைவரும் கலந்துரையாடியது மகிழ்ச்சி அளித்தது. புலம்பெயர்ந்த நாட்டில் இன்றைய காலகட்டத்தில் அம்பேத்கர் செயல்பாடுகளும் சிந்தனைகளும் காலத்தின் தேவை என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.
மதிய உணவிற்காக அனந்தபுரம் என்ற பெயர் கொண்ட ஓர் உணவகத்திற்குச் சென்றிருந்தோம். உணவு வகைகளை ஆர்டர் செய்த பின்னரும் இந்த கலந்துரையாடல் தொடர்ந்தது.
புலம்பெயர்ந்த சூழலிலும் ஏராளமான தமிழ் குடும்பங்கள் இருக்கின்ற நிலையிலும் கூட குழந்தைகளுக்கான தமிழ் இலக்கியங்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை இங்கு லண்டன் நகரில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும் உணர முடிகிறது.
எத்தனையோ விஷயங்களுக்கு நூற்றுக்கணக்கான பவுண்டுகளையும் யூரோக்களையும் செலவிடும் தமிழ் மக்கள் மாதம் ஒரு தமிழ் நூல் வாங்குவதற்கு குறைந்த ஒரு கட்டணத்தை கூட செலவிட விரும்புவதில்லை. இப்படி ஒரு நிலை இருக்கும் பட்சத்தில் எவ்வகையில் தமிழ் இலக்கியங்களை புலம் பெயர்ந்த நாடுகளில் இரண்டாம் தலைமுறைக்கு நாம் அறிமுகப்படுத்த முடியும்?
புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்ற தமிழ் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். தமிழ் புத்தகங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். புத்தகக் கண்காட்சிகள் நடக்கும் போது திரளாக வந்து பார்த்து நூல்களை வாங்கிச் செல்ல வேண்டும். திரு பௌவுசர் போல பல சிரமங்களுக்கிடையே புத்தகக் கடைகளை நடத்துவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இத்தகைய முயற்சிகளுக்கு தமிழ் மக்களிடையே ஆர்வமும் ஆதரவும் கிட்டும் போது தமிழ் மொழியும் பண்பாடும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பட அது அடிப்படையை வகுக்கும்.
லண்டன் முருகன் கோயில் இங்கு ஈஸ்ட் ஹேம் பகுதியில் இருக்கும் மிகப் பழமையான கோயிலாகும். லண்டன் நகரில் அமைக்கப்பட்ட முதல் கோயில் என்ற சிறப்பு இதற்கு உண்டு. இக்கோயிலையும் பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
No comments:
Post a Comment